செல்போன் கடையில் திருடிய என்ஜினீயரிங் பட்டதாரி கைது…!!
திருப்பூர் ரெயில் நிலையம் அருகே சக்தி என்பவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த மாதம் 27–ந்தேதி இந்த கடையின் மேற்கூரையை உடைத்து 81 செல்போன்களை மர்ம நபர் திருடிச்சென்றான். இதுகுறித்து திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சம்பந்தப்பட்ட செல்போன் கடைக்கு முன்புறம் உள்ள கடைகளில் ரகசிய கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.
அந்த காமிராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டபோது அதில் செல்போன் திருடிய வாலிபரின் உருவம் பதிந்து இருந்தது. அந்த படத்தை வைத்து போலீசார் தேடினார்கள். இதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் தென்னரசு தலைமையில் ஏட்டு தங்கவேல், போலீஸ்காரர்கள் சந்தோஷ்குமார், பழனிக்குமார், நாகராஜ் குட்டி, அம்சத்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.
இந்தநிலையில் சம்பந்தப்பட்ட வாலிபர் சேலத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தது தெரியவந்தது. லாட்ஜில் அந்த வாலிபர் தெரிவித்த விவரங்களை வைத்து போலீசார் தேடினார்கள்.
இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை போலீசார் திருப்பூரில் வைத்து பிடித்தனர். விசாரணையில் அவர் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா விஜயாபுரத்தை சேர்ந்த செல்வக்குமாரின் மகன் தினேஷ் (வயது 24) என்பதும் இவர் என்ஜினீயரிங் பட்டதாரி என்பதும் தெரியவந்தது.
விசாரணையில் என்ஜினீயரிங் படித்து வேலைக்கிடைக்காதால் படிப்பதற்காக அக்கம் பக்கத்தில் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. இதனால் திருப்பூர் வந்து செல்போன் கடையில் திருடியதாக அவர் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த 81 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தினேஷ் கடந்த சில நாட்களுக்கு முன் அவினாசியில் உள்ள செல்போன் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்து 7 செல்போன்களை திருடியுள்ளார். அந்த செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் தினேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Average Rating