இஸ்ரேலில் அமெரிக்க சுற்றுலா பயணி குத்திக்கொலை…!!
இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையேயான எல்லைப்பிரச்சினை தொடர்ந்து வலுத்து வருகிறது. பாலஸ்தீனர்கள் தினந்தோறும் இஸ்ரேலர்களை கார்களால் மோதியும், கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகி உள்ளது. அவ்வாறு தாக்குதல் நடத்துபவர்களை இஸ்ரேலிய போலீசார் அல்லது பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்று விடுகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் புகழ்பெற்ற சுற்றுலா தலமான டெல் அவிவ் நகரில் உள்ள கடற்கரை பகுதிக்கு வந்த பாலஸ்தீனர் ஒருவர் அங்கிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக குத்தி தாக்குதல் நடத்தினார். இதில் அமெரிக்க சுற்றுலா பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்திய பாலஸ்தீனரை சுட்டுக்கொன்றனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவத்துக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. கொல்லப்பட்ட அமெரிக்க சுற்றுலா பயணி டெய்லர் ஆலன் போர்ஸ் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். இதற்கிடையில் நேற்று முன்தினம் இதேபோல் வெவ்வேறு இடங்களில் தாக்குதல்களில் ஈடுபட்ட 50 வயது மூதாட்டி உள்பட 3 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
டெல் அவிவ் நகரில் தாக்குதல் நடந்த அதேநேரம் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டு உள்ள அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பிடென், தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
Average Rating