மன்னாரில் ஜன்னல் கம்பிகளை உடைத்து துணிகர கொள்ளை..!!
மன்னார் மாவட்டத்தின் பேசாலை கிராமத்தில், 8ஆம் வட்டாரத்திலுள்ள வீடொன்றில் ஜன்னல் கம்பிகளை உடைத்து உட்புகுந்த திருடர்கள் பல ஆயிரம் பெறுமதியான தங்க நகைகளை திருடிச்சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (11) அதிகாலை வேளையில் நடைபெற்று இருக்கலாம் எனவும், இதனால் கிராம மக்கள் மத்தியில் பயசஞ்சலத்தில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,
கொள்ளையிடப்பட்ட வீட்டின் உரிமையாளர்கள் இன்று விடியற்காலை 4 மணியளவில் வீட்டின் பிரதான அறை கதவை திறந்து பார்த்தபோது அலுமாரியிலுள்ள பொருட்கள் எல்லாம் தரையில் சிதறிய நிலையில் காணப்பட்டதுடன் ஜன்னல் கம்பிகளும் உடைக்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளார்.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக தலைமன்னார் பொலிஸில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர். இந்த முறைப்பாட்டில், 28 பவுண் தங்க நகைகள் மற்றும் 80 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையும் களவாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கொள்ளை சம்பவத்தில் இதுவரை யாரும் கைதுசெய்யப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating