களக்காடு அருகே மூதாட்டியிடம் நகை பறித்த பிரபல கொள்ளையன் கைது…!!
களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மேலரதவீதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி சண்முகத்தாய் (வயது 85). கடந்த 25.5.2014–ம் தேதி இரவில் சண்முகத்தாயின் வீட்டு கதவை மர்ம நபர் தட்டினார்.
சத்தம் கேட்டு விழித்து வந்த சண்முகத்தாயின் முகத்தில் அந்த மர்ம நபர் சாக்கு பையை போட்டு, அவர் சுதாரிப்பதற்குள் அவரது கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 5 பவுன் எடையுள்ள தங்க செயினை பறித்து கொண்டு தப்பி விட்டார். செயினின் மதிப்பு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மூதாட்டியிடம் நகை பறித்த மர்ம நபரை தேடி வந்தனர்.
இந்நிலையில் திருக்குறுங்குடி சப்–இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சமுத்திரம் தலைமையிலான போலீசார் நம்பி தலைவன் பட்டையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு வாலிபர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் அவர் நம்பி தலைவன் பட்டையம் கீழத்தெருவைச் சேர்ந்த சிவபெருமாள் மகன் சுரேஷ் (எ) சூடு சுரேஷ் (26) என்பதும், அவர்தான் மூதாட்டி சண்முகத்தாயிடம் நகை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர் திருடப்பட்ட செயினை வள்ளியூரில் உள்ள ஒரு நகை கடையில் கொடுத்து உருக்கி கம்பி போல் மாற்றி வீட்டில் மறைத்து வைத்திருந்தார். அதனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதாகியுள்ள சுரேஷ் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை கலக்கிய பிரபல கொள்ளையன் என்றும், அவர் மீது திருக்குறுங்குடி, வள்ளியூர், நெல்லை பெருமாள்புரம், பாளை மற்றும் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீசில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Average Rating