திருவள்ளூர் அருகே சிறுவனை கட்டிப்போட்டு 30 பவுன் நகை கொள்ளை…!!
திருவள்ளூர் அருகே உள்ள தெடுகாடு டி.நகரை சேர்ந்தவர் சுகுமாறன் (வயது 42). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி வனிதா. இந்த தம்பதிக்கு மாறன் (15), மதன் (12) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
நேற்று சுகுமாறன் இரவு பணிக்காக சென்றுவிட்டார். வனிதா, மாறனும் கடைக்கு சென்றனர். வீட்டில் மதன் மட்டும் தனியாக இருந்தார். இதை அறிந்த மர்ம நபர்கள் சுகுமாறனின் வீட்டுக்கு வந்து மதனிடம் குடிக்க தண்ணீர் கேட்டனர்.
அவன் தண்ணீர் எடுக்க வீட்டிற்குள் சென்றபோது அவர்கள் பின்னால் சென்று அவனை வாயை பொத்தி, கை, கால்களை கயிற்றால் கட்டி ஒரு அறையில்போட்டு பூட்டினர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 30 பவுன் நகை மற்றும் ½ கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
கடைக்கு சென்ற வனிதாவும், மாறனும் வீடு திரும்பி வந்தபோது வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மதனை தேடிய போது அவன் ஒரு அறையில் கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்தது தெரிந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டான்லி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கொள்ளை நடந்த வீட்டில் கைரேகை நிபுணர்களும் ரேகையை பதிவு செய்தனர். கொள்ளையன் உள்ளூரை சேர்ந்தவனாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
Average Rating