மேலூர் அருகே பஸ் மீது லாரி மோதி விபத்து: வடமாநில பெண்கள் 3 பேர் பலி…!!
மகாராஷ்டிரா மாநிலம் உக்ரா மாவட்டத்தில் இருந்து பெண்கள் உள்பட 45 பேர் ஆம்னி பஸ்சில் தமிழ் நாட்டிற்கு ஆன்மிக சுற்றுலா புறப்பட்டனர். இவர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். நேற்று திருச்சியிலிருந்து ஆம்னி பஸ்சில் ராமேசுவரம் கோவிலுக்கு புறப்பட்டனர்.
இன்று அதிகாலை மதுரை மாவட்டம், மேலூர்– கொட்டாம்பட்டி இடையே உள்ள கச்சிராயன்பட்டி என்ற இடத்தில் ரோட்டில் இருந்து 50அடி தூரத்தில் டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.
பின்னர் பஸ்சில் இருந்த பெண்கள் உள்பட 45 பேரும் அருகில் இருந்த ஒரு அரசு வங்கி முன்பு துணி, பாய்களை விரித்து தூங்கினர். சிறிது நேரத்தில் ஆம்னி பஸ் பின்பு ஒரு மினிவேனும் வந்து நின்றது. அதிலிருந்தவர்களும் இறங்கி அங்கேயே ஓய்வெடுத்தனர்.
நள்ளிரவு 1 மணியளவில் திருச்சியில் இருந்து மதுரை நோக்கி அசுர வேகத்தில் வந்த லாரி கச்சிராயன்பட்டியில் ரோட்டை விட்டு 50 அடி தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மினிவேன்–பஸ் மீது பயங் கரமாக மோதி மணல் லாரி கவிழ்ந்தது. இதில் வேன் நகர்ந்து அங்கு உறங்கிக் கொண்டிருந்த வடமாநில பக்தர்கள் மீது புகுந்தது. இந்த விபத்தில் வடமாநில பெண்கள் ஷிலா, பிரமிளா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார்கள். மேலும் 20–க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்–இன்ஸ்பெக்டர்கள் பழனிச்சாமி, நல்லுச்சாமி மற்றும் போலீசார், விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் மேலூர், மதுரை அரசு ஆஸ்பத்திரிகளில் அனுப்பி வைத்தனர்.
காயமடைந்தவர்களில் பேபி என்ற பெண் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் லாரி டிவைரை தேடி வருகின்றனர்.
Average Rating