மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாரை தாக்க முயன்ற 4 பேருக்கு தடுப்புக் காவல்…!!
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாரை தாக்க முயன்ற 4 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நாட்டிற்கு எதிராக கோஷமிட்டதால் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் உமர் காலித் அனிர்பன் பட்டாச்சார்யா ஆகியோரை விடுவிக்க வலியுறுத்தி கன்னையா குமார் தலைமையில் இன்று டெல்லியில் பேரணி நடைபெற்றது. பாராளுமன்ற வீதி காவல் நிலையம் அருகே திரண்டிருந்த மாணவர்களிடையே கன்னையா குமார் வேனில் நின்றபடி பேசிக்கொண்டிருந்தார்.
அவர் காவல்துறையை விமர்சனம் செய்து பேசிக்கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த 3 பேர் அவருக்கு எதிராக கோஷமிட்டபடி, அவரை நோக்கி சென்றனர். கன்னையா குமாரை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்புக்கு நின்ற போலீசார், அவர்களை அப்புறப்படுத்தினர்.
அதேசமயம், மற்ற மாணவர்கள் கைகோர்த்து கன்னையா குமாருக்கு அரணாக நின்றனர். அப்போது மற்றொரு நபர் அந்த மாணவர்களை நெட்டித்தள்ளிவிட்டு கன்னையா குமாரை நோக்கி சென்றார். இதனால், அவரையும் போலீசார் அந்த இடத்தைவிட்டு இழுத்துச் சென்றனர்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு அவர்கள் 4 பேரும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதாகவும், பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னையா குமார் கடும் நிபந்தனைகளுடன் 6 மாத கால இடைக்கால ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating