இந்தியாவில் ஆண்டுதோறும் கருக்கலைப்பு செய்வதால் 80,000 பெண்கள் இறப்பு
இந்தியாவில் கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்களில் 80 ஆயிரம் பேர் இறப்பதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து டெல்லியைச் சேர்ந்த டாக்டர் ஹேமா திவாகர் கூறியதாவது: இந்தியாவில் ஆண்டுதோறும் 1 கோடியே 10 லட்சம் பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்கின்றனர். இதில் 80 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. பெரும்பாலான கருக்கலைப்புகள் முறையான பயிற்சி பெறாதவர்களால் செய்யப்படுகிறது. பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்புகள் நடப்பதால்தான் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. கருவுற்றவர்களில் 78 சதவீதம் பேர், குழந்தை பெறும் காலத்தை திட்டமிடாமல் கருவுறுகின்றனர். அப்படிப்பட்ட சம்பவம் நடந்து விட்டாமல், அவர்களில் 25 சதவீதம் பேர் தங்களுக்கு இப்போது குழந்தை தேவையில்லை என்று கருதுகின்றனர். இதனால், ஒரு ஆண்டில் 1 கோடியே 10 லட்சம் கருக்கலைப்புகள் நடக்கின்றன. அவர்களில் 80 ஆயிரம் பேர் வரை பல்வேறு காரணங்களால் இறக்கின்றனர். அவசர கருத்தடை மாத்திரைகள் குறித்து பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 100 பேரில் ஒரு பெண்ணுக்குத்தான் கருத்தடை மாத்திரை குறித்து விழிப்புணர்ச்சி உள்ளது. கருத்தடை சாதனங்கள் குறித்து விளம்பரங்கள் செய்தாலும் அந்த மருந்துகளின் விற்பனை அதிகரிக்கவில்லை. தாம்பத்ய உறவு கொண்ட 72 மணி நேரத்துக்குள் அவசர கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் கருவுறுதலை 80 சதவீதம் தடுக்க முடியும். எனினும், இந்த மாத்திரைகளை அவசர த்துக்குத்தான் பயன்படுத்த வேண்டுமே தவிர, அடிக்கடி பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு ஹேமா திவாகர் கூறினார்.