நெடுஞ்சாலைக்கு நடுவே அமைந்திருக்கும் வீடு: அவதியுறும் வாகன ஓட்டிகள்…!!
சீனாவில் நெடுஞ்சாலைக்கு நடுவே உள்ள வீட்டை விற்பதற்கு உரிமையாளர் மறுத்து வருவதால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்துள்ளனர்.
சீனாவின் ஜீஜங் (Zhejiang) மாகாணத்தில் அமைந்துள்ளது ஜின்ஹாய் மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ள லூடொ என்ற பகுதி வழியாக நெடுஞ்சாலை ஒன்று செல்கிறது.
இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் பெரும் அவதியுறுவதாக கூறப்பட்டுகிறது.
நெடுஞ்சாலையின் நடுவே வீடு ஒன்று உள்ளதே இதற்கு காரணம். இந்த நெடுஞ்சாலையை அமைக்கும்போது கட்டிடத்தின் உரிமையாளரிடம் சாலையை அமைக்கும் ஒப்பந்ததாரர் வீட்டை தங்களிடம் விற்கும்படி கேட்டுள்ளார்.
எனினும் உரிமையாளர் அதற்கு மறுத்துள்ளார். சீனாவின் சொத்துரிமை சட்டத்தின்படி ஒருவரது வீட்டை அவர்களின் விருப்பம் இல்லாமல் தங்களிடம் விற்கும்படி தனியார் கட்டுமான நிறுவனம் கேட்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து கட்டுமான நிறுவனம் அந்த வீட்டை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதிகளில் நெடுஞ்சாலையை அமைத்துள்ளது.
தற்போது நெடுஞ்சாலை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கப்பட்ட நிலையிலும் வீட்டின் உரிமையாளர் வீட்டை விற்க மறுப்பதால் வீட்டை சுற்றி செல்லும் நிலைக்கு வாகன ஓட்டிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் இந்த வீட்டின் காரணமாக சிரமமடைகின்றனர்.
தற்போது வீட்டின் உரிமையாளர் வீட்டை விற்பது தொடர்பாக தனது குடும்ப உறுப்பினர்களிடம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் பல பகுதிகளில் இது போன்று சாலையின் நடுவில் கட்டிடங்கள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating