இந்தியப் பெண்ணுக்கு ரூ.25 லட்சம் நஷ்டஈடு இங்கிலாந்து கோர்ட்டு தீர்ப்பு
வீட்டுவேலைக்காரிபோல நடத்தப்பட்ட இந்திய மருமகளுக்கு ரூ.25 லட்சம் நஷ்டஈடு வழங்கும்படி இங்கிலாந்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.இங்கிலாந்து நாட்டில் எஸ்செக்ஸ் நகரில் வசித்து வருபவர் தல்பீர் கவுர் பாகர். 52 வயதுப்பெண்ணான இவர், இந்தியாவில் பிறந்தவர். இவர் இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியக்குடும்பத்தில் மருமகளாக சென்றார். அவருக்கு பிறந்த மகன் தான் கினா சத்வீர் சிங். வயது 26. இவருக்கும், இந்தியாவில் பிறந்த ஹர்தீப்சிங் பாகர் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. ஹர்தீப்சிங் தன்னை ஒருவேலைக்காரிபோல நடத்தியதாக கூறி, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:- திருமணமான 4 மாதத்திலேயே என்னை மாமியார் கொடுமைப்படுத்தத் தொடங்கி விட்டார். என் மாமியார் வீட்டுச்சாவியை என்னிடம் தரமாட்டார். என்னை ஷாப்பிங் செல்லவும் அனுமதிக்கமாட்டார். டி.வி. பார்க்கவும் அனுமதிப்பது இல்லை. 2003-ம் ஆண்டு ஈராக் போர் நடந்தது கூட எனக்குதெரியவே தெரியாது.
காலையில் 6.30 என்னை எழுப்பி விடுவார். அதன்பிறகு படுக்கைக்கு செல்லும்போது தான் நான் என் அறைக்கு செல்லமுடியும். கழிவறையை கையால் கழுவச்சொல்வார். இழிவான வேலைகளை எல்லாம் செய்யச்சொல்வார். வாரத்துக்கு ஒரு முறைமட்டுமே பெற்றோரிடம் பேசும் நான், என் பெற்றோரும் வாரம் ஒருமுறை மட்டுமே என்னிடம் பேசமுடியும். நான் பேசுவதை மாமியார் ஒட்டுக்கேட்பார். பேசி முடித்ததும் செல்போனை பிடுங்கிக்கொண்டுவிடுவார்
விவாகரத்து
கடந்த 2003-ம் ஆண்டு மார்ச் என் மாமனார் பிரிதிவிபால் சிங் பாகர், திடீர் என்று என் தந்தைக்கு டெலிபோன் செய்து உங்கள் மகளை அழைத்துச்செல்லுங்கள் என்று சொல்லிவிட்டார். அதன்பிறகு விவாகரத்து செய்யப்பட்டேன்.
என் முன்னாள் கணவர் மீண்டும் ஒரு இந்தியப்பெண்ணை மணந்து கொண்டார். அதன்பிறகு நான் வேதனையில் எந்த வேலையும் செய்யமுடியாமல் முடங்கிக்கிடந்தேன். இதுபோன்ற நிலைமை மற்ற பெண்களுக்கும் வரக்கூடாது என்பதற்காக, நான் இந்த வழக்கை தொடர்ந்து உள்ளேன். எனக்கு ஏற்பட்ட மனத்துயருக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.
இந்த வழக்கு நாட்டிங்காம் கவுண்டி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த குற்றச்சாட்டை மறுத்த தல்பீர் பாகர், காலையில் குளியல் அறையில் 3 மணி நேரம் செலவிடுவதாகவும், எப்போதும் போனும் கையுமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி டிமோதி ஸ்காட், ஹர்தீப்சிங்குக்கு ஏற்பட்ட மனவேதனைக்காகவும், இழைக்கப்பட்ட சித்ரவதைக்காகவும் ரூ.25 லட்சம் நஷ்டஈடு வழங்கவேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.