ஆந்திராவில் ஹோலி கொண்டாட்டத்தில் 5 பேர் பலி…!!
ஆந்திராவில் பல்வேறு இடங்களில் நேற்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.
விஜயவாடாவில் உள்ள சித்தார்தா கல்லூரியில் என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்கள் குண்டூர் மாவட்டம் சித்தா நகரில் ஹோலி கொண்டாட வந்தனர்.
வண்ணப் பொடிகளை தூவி ஆடிப்பாடிய அவர்கள் இறுதியில் அங்குள்ள கிருஷ்ணா நதியில் குளித்தனர்.
ஆற்றிலும் அவர்கள் வண்ணக்கலவை பாட்டில்களை தண்ணீரில் வீசியடித்து பிடிக்கும் விளையாட்டில் ஈடுபட்டனர்.
அப்போது மனோஜ் துர்காசாய் ஸ்ரீகாந்த், ஜெயநாத சாய்கிருஷ்ணா, போத்தன சுபாஷ் ஆகிய 3 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.
இதே போல் இன்னொரு சம்பவத்தில் விசாகப்பட்டினம் கடலில் மூழ்கி 2 பேர் பலியானார்கள். பெதனூர் பேட்டையைச் சேர்ந்த 5 பேர் ஹோலி கொண்டாடி விட்டு விசாகப்பட்டினம் கடலில் குளித்தனர். அப்போது அவர்கள் அலையில் சிக்கிக் கொண்டனர்.
அதே பகுதியைச்சேர்ந்த கார்த்திக் என்பவர் 4 பேரை மீட்டார். ஆனால் ராமு என்பவரை மீட்க முயன்ற போது இரு வருமே கடல் அலையில் சிக்கினார்கள். இதில் கார்த்திக்கும் ராமுவும், கடலில் மூழ்கி பலியானார்கள்.
கடலில் குளிக்க தடை விதித்த போதிலும் அதையும் மீறி குளித்ததால் இந்த சோக சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
Average Rating