விண்வெளியில் தாவர உற்பத்தி செய்து மீண்டும் பூமிக்கு கொண்டு வரப்படும்: செயற்கைக்கோளை ஏவும் சீனா
விண்வெளியில் விதைகளை முளைக்கச் செய்து தாவர உற்பத்தி ஆய்வை மேற்கொள்வதற்காக, ஒரு செயற்கைக்கோளை சீனா விண்ணில் செலுத்தவுள்ளது. இத்தகைய செயற்கைக்கோளை சீனா செலுத்துவது இதுவே முதல் முறையாகும். “ஷிஜியான்~8′ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த செயற்கைக்கோளில் உணவு தானிய வகைப் பயிர்கள், பணப் பயிர்கள், காளான்கள் ஆகியவற்றின் பல்வேறு வகை மாதிரிகளைச் சேர்ந்த 2000 விதைகள் அனுப்பப்பட உள்ளன. அந்த செயற்கைக்கோள் 15 நாள்கள் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும்.
அப்போது அந்த விதைகள் விண்வெளியிலேயே முளைக்கும். 15 நாள்களுக்குப் பின் அந்த செயற்கைக்கோள் மீட்கப்பட்டு மீண்டும் பூமிக்கே கொண்டு வரப்படும். விண்வெளியில் விதைகளை முளைக்கச் செய்வதால், அவற்றின் உற்பத்தித் திறன் உள்ளிட்ட தன்மைகள் அதிகரிக்கின்றன என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
விண்வெளியில் செலுத்தி, மீண்டும் மீட்டு பூமிக்குக் கொண்டு வரத்தக்க செயற்கைக்கோளை செலுத்தும் திறன் பெற்ற மூன்றாவது நாடு சீனா என்பது குறிப்பிடத் தக்கது.
வடமேற்கு சீனாவின் கான்சு மாகாணத்தில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து, வரும் செப்டம்பரில் “ஷிஜியான்~8′ செயற்கைக்கோள் செலுத்தப்பட உள்ளது.
தேசியப் பாதுகாப்புக்கான அறிவியல், தொழில்நுட்ப, தொழிற்சாலை ஆணையம், வேளாண் அமைச்சகம், சீன விண்வெளி அறிவியல் குழும நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த செயற்கைக்கோளைச் செலுத்துகின்றன.
மீண்டும் மீட்டு பூமிக்குக் கொண்டு வரக்கூடிய 22 செயற்கைக் கோள்களை சீனா இதுவரை விண்ணில் செலுத்தியுள்ளது. அவற்றில் ஒரே ஒரு செயற்கைக்கோள் மட்டுமே கோளாறாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.