திருவள்ளூர் மாவட்டத்தில் கிணற்றில் மூழ்கி 3 மாணவிகள் பலி..!!
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா எஸ்.பி. கண்டிகை காலனியை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகள் ரோஜா (வயது 11), அதே பகுதியை சேர்ந்த ரஜினி மகள் ஸ்ரீமதி (11), நாகராஜ் மகள் அம்சவேணி (11). மாணவிகளான ரோஜா, ஸ்ரீமதி, அம்சவேணி 3 பேரும் எஸ்.பி. கண்டிகை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று அவர்கள் 3 பேரும் அங்கு உள்ள கிணற்றில் குளிக்க சென்றனர். குளிக்கும்போது நீச்சல் தெரியாததால் 3 மாணவிகளும் கிணற்றில் மூழ்கினார்கள். தங்களை காப்பாற்றும்படி அவர்கள் அலறினார்கள். இவர்களது அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தில் வயல்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடி சென்று பார்த்தனர். 3 மாணவிகளும் கிணற்றில் மூழ்கியது தெரிய வந்தது.
இது குறித்து சோளிங்கர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை படை வீரர்களும் அங்கு சென்றனர். கிணற்றில் இறங்கி தேடிய போது மாணவி அம்சவேணி பிணமாக மீட்கப்பட்டார். மாணவிகள் ஸ்ரீமதி, ரோஜா ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டனர். அவர்களை சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அவர்கள் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் பாலசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருடைய மகன் பிரகாஷ் (12). 7-ம் வகுப்பு மாணவர். இவர் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் வாங்குவதற்காக நேற்று மதியம் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டைக்கு சென்றார். வழியில் சோளிங்கர் சாலையில் டாஸ்மாக் கடை எதிரே உள்ள கிணற்றில் சிலர் குளித்து கொண்டு இருந்தனர்.
அதை வேடிக்கை பார்ப்பதற்காக பிரகாஷ் கிணற்றின் அருகே இறங்கினார். அப்போது அவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்து விட்டார். இந்த இரு சம்பவங்கள் குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating