திருத்தணி அருகே லாரி மோதி புது மாப்பிள்ளை பலி…!!
திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் புது மாப்பிள்ளை பலியானார்.
திருத்தணி மாமண்டூரை சேர்ந்தவர் அய்யப்பன் (28). இவரது மனைவி காயத்திரி. இவர்களுக்கு திருமணம் ஆகி 25 நாட்கள் ஆகிறது. அய்யப்பன் திருத்தணி கே.சி. கண்டிகையில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். திருத்தணி–சித்தூர் சாலையில் சென்று கொண்டு இருந்தார். திருத்தணி சித்தூரில் உள்ள பெட்ரோல் பங்க அருகே சென்ற போது எதிரே மின்னல் வேகத்தில் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அய்யப்பன் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து நடந்தவுடன் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் விரைந்து சென்று அய்யப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகிறார்கள்.
மற்றொரு விபத்து…
திருத்தணி மங்காபுரத்தை சேர்ந்தவர்கள் சீனிவாசன், விஜயன், அங்காளி, சுப்பிரமணி. இவர்கள் 4 பேரும் கூலி தொழிலாளர்கள்.
இன்று காலையில் மங்காபுரத்தில் இருந்து திருத்தணியை நோக்கி வேலைக்காக ஷேர் ஆட்டோவில் சென்றனர். ஆட்டோவை அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் ஓட்டினார். ஆட்டோ மங்காபுரத்தை அடுத்த முருக்கம்பட்டில் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் சீனிவாசன், விஜயன், அங்காளி, சுப்பிரமணி ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். டிரைவர் கண்ணன் தப்பி ஓடி விட்டார்.
தகவல் அறிந்த திருத்தணி போலீசார் விரைந்து சென்று 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி மருத்துவமனை யில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி சீனிவாசன் இறந்தார். மற்ற 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து திருத்தணி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Average Rating