ஏ.சி., போட்டதால் தகராறு: மனைவி, மகனை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற கோபக்கார முதியவர்…!!
கேரள மாநிலத்தில் தனது பேச்சை மதிக்காமல் ஏ.சி., இயந்திரத்தை போட்டதால் கோபமடைந்த 85 வயது முதியவர் இன்று அதிகாலை தனது மனைவி மற்றும் மகனை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், கொச்சி மாவட்டம், அன்காமலி அருகேயுள்ள குருக்குட்டி பகுதியைச் சேர்ந்தவர் பால்(85). ஓய்வுபெற்ற ரெயில்வேதுறை அதிகாரியான இவர், தனது மனைவியுடன் வாழ்ந்து வந்தார். இந்த தம்பதியரின் மகன் வளைகுடா நாட்டில் வேலைசெய்து வந்தார்.
சமீபத்தில் சொந்த ஊருக்கு திரும்பிய இவர்களின் மகன், நேற்றிரவு வீட்டில் ஏ.சி., இயந்திரத்தை போட்டபடி தூங்கினார். இதய நோயால் பாதிக்கப்பட்டு, சமீபத்தில் ‘ஆன்ஜியோகிராம்’ சிகிச்சை பெற்றிருந்த பால், தனது உடல் நலத்தை காரணம் காட்டியும், கரண்ட் பில் ஏறிவிடும் எனக் கூறியும் ஏ.சி., இயந்திரத்தை அணைக்கும்படி கூறினார். இதற்கு அவரது மகன் மறுத்து விட்டதாக தெரிகிறது.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் ஏ.சி., இயந்திரத்தை அணைத்து விடும்படி மகனிடம் பால் மீண்டும் வற்புறுத்தியுள்ளார். மீண்டும் அவர் மறுத்து விட்டார். மகனுக்கு வக்காலத்தாக பரிந்துப் பேசிய மனைவியின்மீதும், மகனின்மீதும் பாலுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.
தனது பேச்சுக்கு இந்த வீட்டில் மதிப்பில்லை என முதியவர்களுக்கே தோன்றும் ஒருவித தாழ்வு மனப்பான்மை அவரது ஆத்திரத்தை ஆவேசமாக மாற்றியது. இதன்விளைவாக, ஆவேசத்தின் உச்சகட்டத்துக்குச் சென்ற பால், வீட்டில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து மனைவி மேரி(74) மற்றும் மகன் தாமஸ்(45) ஆகியோரை சரமாரியாக தாக்கினார்.
மண்டை பிளந்த நிலையில் ரத்தவெள்ளத்தில் விழுந்த இருவரையும் அக்கம்பக்கத்தில் உள்ள உறவினர்கள் தூக்கிச் சென்று ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ஆத்திரத்தில் அறிவை இழந்த முதியவர் பாலை கைது செய்து, கொலைவழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
Average Rating