திருவண்ணாமலை அருகே சாத்தனூர் அணை கால்வாயில் மூழ்கி 2 வாலிபர்கள் சாவு…!!
திருவண்ணாமலை அருகே சாத்தனூர் அணை கால்வாயில் மூழ்கி 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
திருவண்ணாமலை அருகே உள்ள பாலாநகரை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் பிரகாஷ் (வயது 19). ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்துவிட்டு, ஈரோட்டில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வந்தார். பிரகாஷ், கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டிற்கு வந்தார்.
இந்த நிலையில், தண்டராம்பட்டு அருகே உள்ள ராதாபுரம் கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக கோவிந்தன் தனது மகன் பிரகாஷ் மற்றும் குடும்பத்தினருடன் நேற்று சென்றார். பிரகாசுடன் அவரது நண்பர் செங்கம் புதுப்பட்டு பகுதியை சேர்ந்த மணி (வயது 17) என்பவரும் சென்றார்.
பிரகாசும், மணியும் நேற்று மாலை தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணையின் இடதுபுற நீர்வரத்து கால்வாயில் குளிக்க செல்வதாக பெற்றோரிடம் தெரிவித்து சென்றனர்.
கால்வாயின் கரையோரம் ஆடைகளை அவிழ்த்து வைத்துவிட்டு இருவரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது கால்வாயில் அதிகளவு தண்ணீர் சென்றது. இதனால் சுழலில் 2 பேரும் சிக்கினர். கரையேற முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. இருவரும் தண்ணீரில் மூழ்கினர். அதன்பிறகு மேலே வரவில்லை. குளிக்கச் சென்ற 2பேரும் நீண்ட நேரமாகியும் திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உறவினர்களுடன் சாத்தனூர் அணை கால்வாய்க்கு சென்றனர். கரையில் ஆடை மட்டும் இருந்தது. இதனால் சந்தேகமடைந்து கால்வாயில் இறங்கி சிலர் தேடினர்.
ஆனால் பிரகாஷ் மற்றும் மணியின் உடல் சிக்கவில்லை. உடனடியாக தண்டராம்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சாத்தனூர் அணையில் இருந்து இடதுபுற கால்வாய்க்கு திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது.
இருள் சூழ்ந்ததால் தேடுதல் பணி பாதிக்கப்பட்டது. இன்று காலையில் தேடும் பணி நடந்தது. அப்போது கரையோரம் ஆடை இருந்த இடத்தில் இருந்து 10 அடி தொலைவில் கால்வாயில் சிக்கி இருந்த பிரகாஷ் மற்றும் மணியின் உடல் பிணமாக கண்டெடுக்கப்பட்டது.
போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating