இலங்கை ராணுவத்துக்கு பதிலடி கொடுப்போம்: விடுதலைப்புலிகள் எச்சரிக்கை
இலங்கையில் கடந்த 3 மாதங்களாக விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த போர்களில் பொதுமக்கள் உள்பட 700 பேர் பலியாகி விட்டனர். இந்த நிலையில் திரிகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இலங்கை ராணுவ விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று 3-வது நாளாக இந்த தாக்குதல் நீடித்தது.
இந்த தாக்குதலில் வெருகல் முகத்துவாரத்தில் உள்ள பள்ளிக்கூடம் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது. தமிழர்களின் ஏராளமான வீடுகள் தரைமட்டமானது. போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினருடன் விடுதலைப்புலிகள் பேச்சு நடத்திக் கொண்டிருக்கும்போதே இந்த தாக்குதல்கள் நடந்தது.
திரிகோணமலையில் மேலும் தாக்குதல் நடத்த ராணுவத்தினர் மாவிலாறு நோக்கி முன்னேறி வந்தனர். தோணித்தாண்டமடு பகுதியில் விடுதலைப்புலிகள் எதிர்தாக்குதல் நடத்தி ராணுவத்தினரை மேலும் முன்னேற விடாமல் தடுத்தனர்.
தமிழர் பகுதிகளில் ராணுவம் நடத்திய குண்டு வீச்சுக்காக இலங்கை அரசுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் எழிலன் அறிவித்துள்ளார். இதேபோல் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்செல்வனும் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ராணுவ விமானங்கள் குண்டு வீசி வருவதும் போர் பிரகடனம்தான். இதை பகிரங்க போராக அறிவித்து பதில் தாக்குதல் நடத்துவோம். ராணுவத்துக்கு தகுந்த பதிலடி கொடுப்போம். இவ்வாறு தமிழ்சÙல்வன் கூறியுள்ளார்.
போர் நிறுத்த கண்காணிப்பு குழுவில் இருந்து வாபஸ் பெறுவதாக டென்மார்க், பின்லாந்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. இதனால் இலங்கையில் போர் அபாயம் மேலும் அதிகரித்து வருகிறது.