லெபனான் எண்ணைக்கிடங்கு குண்டுவீசித் தகர்ப்பு
லெபனான் நாட்டில் உள்ள எண்ணைக்கிடங்கு மீது இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியதில் அது தகர்க்கப்பட்டது. அதில் இருந்து வெளியான 30 ஆயிரம் டன் பெட்ரோல் கடலில் கலந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தி உள்ளது. லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் கடந்த 16 நாட்களாக விமானத் தாக்குதல் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது.
பெய்ரூட் நகரின் அருகே ஜிய்யா என்ற இடத்தில் உள்ள மின்உற்பத்தி நிலையம் மீது இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியது. இதில் மின்உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டது.
அங்கு இருந்த எண்ணை சேமிப்பு கிடங்கின் மீதும் லெபனான் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது. இதில் எண்ணைக்கிடங்கு தகர்க்கப்பட்டது. அங்கு இருந்து 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் டன் பெட்ரோல் அங்கு இருந்து வெள்ளம்போல் பெருக்கெடுத்தது. அது மத்தியத்தரைக்கடலில் கலந்தது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. கடல்நீர் மாசுபட்டு உள்ளது. மீன்கள் செத்து மிதக்கின்றன. தீவிபத்து ஏற்படும் ஆபத்தும் ஏற்பட்டு உள்ளது.
ரூ.250 கோடி
லெபனான் நாட்டு சரித்திரத்தில் இதுபோல மிகப்பெரிய பரப்பில் பெட்ரோல் கடலில் கலந்து நாங்கள் பார்த்தது இல்லை என்று லெபனான் சுற்றுச்சூழல் மந்திரி யாகோப் அல் சராப் நிருபர்களிடம் கூறினார். இதுபோன்ற மிகப் பெரிய கடல் மாசை சுத்தப்படுத்துவதற்கு எங்களிடம் நிதிவசதியும் இல்லை. நிபுணர்களும் இல்லை என்றும் அவர் கூறினார்.
பெட்ரோல் கடலில் கலந்ததை சுத்தப்படுத்த 250 கோடி ரூபாய் செலவாகும் என்று தெரிகிறது. காற்று வீசும்போது கடலில் கலந்த இந்த பெட்ரோல் மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் தூரம் பரவுகிறது.
போர்க்கப்பல்
இஸ்ரேலின் போர்க்கப்பலை ஹிஸ்பொல்லா தீவிரவாதிகளின் ஏவுகணைகள் தாக்கி அழித்தன. அதில் இருந்த டீசலும் கடலில் கொட்டியது. அதுவும் கடல்நீரை மாசுபடுத்தி வருகிறது. பெய்ரூட் விளையாட்டுக் குழுவைச் சேர்ந்த 7 பேர் பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் கடலில் கலந்த பெட்ரோலை நிரப்பி வெளியே கொட்டிவருகின்றனர்.
இந்தப்போரில் இதுவரை 700 பேர் பலியாகி உள்ளனர். லெபனானில் உள்ள 3 விமானநிலையங்கள் தரைமட்டமாகிவிட்டன.