வீடு இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு ரூ. 3 லட்சம் நிதி திரட்டிய 5 வயது சிறுவன்…!!
கனடா நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தால் வீடில்லாமல் தவித்து வரும் பொது மக்களுக்கு 5 வயது சிறுவன் ஒருவன் சுமார் 3 லட்ச ரூபாய் நிதி திரட்டியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அல்பெர்ட்டா மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் மெக்முர்ரி என்ற நகருக்கு அருகில் உள்ள காட்டில் தீ விபத்து ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக எரிந்துக்கொண்டு வருகிறது.
இந்த காட்டுத்தீ நகர மக்களையும் பாதித்துள்ளதால், ஆயிரக்கணக்கான மக்கள் தங்களை வீடு, உடமைகளை விட்டுவிட்டு அண்டை நகரங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு தரப்பிலிருந்து நிதியுதவி கிடைத்து வருகிறது.
இந்நிலையில், ஓண்டாரியோ மாகாணத்தை சேர்ந்த அலெக்ஸாண்டர் டக் என்ற 5 வயது சிறுவனின் செயல் பொதுமக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காட்டுத்தீ குறித்து செய்திகள் மூலம் அறிந்த அந்த சிறுவன் உடனடியாக தனது தாயாரின் உதவியுடன் Whitby நகருக்கு அருகில் உள்ள ஷொப்பிங் கட்டிடத்திற்கு சென்றுள்ளான்.
பின்னர், அங்குள்ள ஒரு நடைப்பாதையில் சிறிய மேடை ஒன்றை தயாரித்து அங்கு ‘எலுமிச்சைப் பழச்சாறு’ தயாரித்து அங்கு வருபவர்களுக்கு விற்பனை செய்துள்ளான்.
’ஃபோர்ட் மெமுர்ரி காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள்’ என்ற வாசகங்களுடன் நிதி திரட்டியுள்ளான்.
சிறுவனின் முயற்சியை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள், 20, 30, 50, 100 டொலர்கள் என சன்மானம் வழங்கியுள்ளனர்.
நேற்று வரை சிறுவனுக்கு 2,600 டொலர் (3,79,548 இலங்கை ரூபாய்) வரை நிதி கிடைத்துள்ளது. இந்த தொகை முழுவதும் கனடா செஞ்சிலுவை சங்கத்திற்கு அனுப்பப்பட்டு வீடில்லாமல் இருப்பவர்களுக்கு வழங்கப்படும்.
சிறுவனின் உதவும் மனப்பான்மையை அறிந்த அப்பகுதியை சேர்ந்த Celina Caesar-Chavannes என்ற நாடாளுமன்ற உறுப்பினர் நேரடியாக சிறுவனை சந்தித்து தன்னுடைய கைப்பட எழுதிய பாராட்டு பத்திரத்தை அளித்து வாழ்த்தியுள்ளார்.
சிறுவனின் செயலை பாராட்டிய செஞ்சிலுவை சங்கம், இதுவரை பல்வேறு தரப்பிலிருந்து சுமார் 30 மில்லியன் டொலர் சன்மானமாக பெற்றுள்ளதாகவும், இதன் மூலம் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
Average Rating