ஈராக்கில் உணவு விடுதி மீது துப்பாக்கிச்சூடு: 12 பேர் பலி..!!
ஈராக்கில் ஷியா பிரிவினர் பெரும்பான்மையினராக வாழும் பாலாத் நகரம், தலைநகர் பாக்தாத்தில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளது.
அங்குள்ள ஒரு உணவு விடுதியில் ஏராளமான இளைஞர்கள், வார விடுமுறையை கொண்டாடுவதற்காக நேற்று முன்தினம் இரவு கூடி இருந்தனர். அப்போது கார்களில் அங்கு வந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள், காரில் இருந்தவாறு அந்த உணவு விடுதியை நோக்கி எந்திர துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர்.
இதனால் அங்கிருந்தவர்கள் பதற்றத்துடன் நாலாபக்கமும் சிதறி ஓடினர். பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டை அந்த நபர்கள் 10 நிமிடம் நடத்தி விட்டு, அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர், மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அங்குள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். இந்த தாக்குதலை நடத்திய நபர்கள், 3 போலீஸ் சோதனை சாவடிகளை கடந்து சென்று இந்த தாக்குதலை நடத்தியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
Average Rating