விசித்திர நோயால் உடல் முழுவதும் முடி வளர்ந்து அவதிப்படும் 12 வயது வங்காளதேச சிறுமி..!!
வங்காள தேசத்தை சேர்ந்தவர் அப்துல் ரசாக். இவர் மோட்டார் பைக் டாக்சி டிரைவராக உள்ளார். இவரது மகள் பிதி அக்தர் (வயது 12). இவர் ஓநாய் நோய் என்று அழைக்கப்படும் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார். பிறக்கும் போதே அவரது முகத்தை சுற்றி முடி வளர்ந்திருந்தது. பின்னர் உடல் முழுவதும் முடி வளர ஆரம்பித்துள்ளது. இந்த குறைபாடு, குழந்தை வளர வளர சரியாகி விடும் என்று பெற்றோர் நினைத்து அப்படியே விட்டுவிட்டனர். ஆனால் வளர வளர அவருடன் ரோமங்களும் உடல் முழுவதும் வளர தொடங்கியது. அத்துடன் அவரது ஊனும் வளர்ந்து வீங்கி காணப்பட்டது.
இதனால் அந்த சிறுமி தன்னுடைய உடலை மூடிக்கொண்டு இருக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளார். அவரது தந்தைக்கு வருமானம் அதிகம் இல்லாததால் தொடர்ந்து மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க முடியாமல் உள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் அம்மா கூறுகையில் ‘‘அவள் பிறக்கும்போது கடவுள் கொடுத்த வரம் என்று நினைத்தோம். ஆனால், ஒவ்வொரு நாளும் வலியுடன் வாழும் எனது குழந்தையை நீண்ட காலம் என்னால் பார்க்க முடியாது’’ என்றார்.
சிறுமிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் கூறுகையில் ‘‘உலகத்தில் நான்கு அல்லது ஐந்து பேர்தான் இதுபோன்ற விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்’’ என்றார்.
சிறுமியின் அறுவை சிகிச்சைக்காக அவரது பெற்றோர் நிதி உதவியை நாடியுள்ளார். பலர் உதவியும் அளித்துள்ளனர்.
பிதி இதுகுறித்து கூறுகையில் ‘‘நான் மீண்டும் பள்ளிக்குச் செல்ல விரும்புகிறேன். நான் வளர்ந்து பெரியவளாகும் போது டாக்டராக விரும்புகிறேன்’’ என்றார்.
Average Rating