ஆந்திராவில் சுவர் இடிந்து 7 பேர் உயிரோடு புதைந்து பலி..!!
ஆந்திர மாநிலம் குண்டூர் லட்சுமிபுரத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்து பரிதாபமாக பலியானார்கள்.
ஆந்திர மாநிலம் குண்டூர் லட்சுமிபுரத்தில் 4 மாடியில் வர்த்தக நிறுவனம் கட்டப்பட்டு வருகிறது. இதில் 30–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்தனர்.
நேற்று மதியம் சுரங்க கீழ்தளம் அமைக்கும் பணியில் சில தொழிலாளர்கள் ஈடுபட்டனர். 10 அடி ஆழத்தில் இறங்கி மண் தோண்டிக் கொண்டு இருந்த போது திடீர் என மண் சரிந்தது. இதில் பிரசாத் என்பவர் சிக்கிக் கொண்டார். அவரை மீட்கும் முயற்சியில் மற்ற தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது கட்டிடத்தின் சுவர் இடிந்து குழியில் விழுந்தது. மண் குவியலில் பல தொழிலாளர்கள் புதையுண்டனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அவர்களை மீட்டனர்.
இந்த விபத்தில் 7 பேர் பலியானார்கள். அனைவரும் 16 முதல் 21 வயதுக்குட்பட்ட மாணவர்கள். பள்ளி விடுமுறை என்பதால் மேல் படிப்புக்கு பணம் சம்பாதிப்பதற்காக கட்டிட வேலைக்கு வந்தவர்கள். ஆனால் சுவர் இடிந்ததும் மண்ணுக்குள் உயிரோடு புதைந்து சமாதியாகி விட்டனர்.
விபத்தில் பலர் காயம் அடைந்தனர். அவர்கள் குண்டூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பலியானவர்கள் குடும்பங்களுக்கு அரசு சார்பில் ரூ. 5 லட்சமும் கட்டிட காண்டிராக்டர் சார்பில் ரூ. 15 லட்சமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொகுதி எம்.எல்.ஏ. உறுதி அளித்துள்ளார்.
Average Rating