காற்றழுத்த தாழ்வுநிலை புயல் சின்னமாக மாறுகிறது: 24 மணி நேரத்துக்கு பலத்த மழை எச்சரிக்கை…!!
இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்க கடலில் சில நாட்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியதால் தென் தமிழகத்திலும், கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் தீவிரம் அடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல் சின்னம்) மாறி தமிழகத்தின் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதன் காரணமாக தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு அனேக இடங்களில் பலத்த மற்றும் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வடக்கு மற்றும் மத்திய தமிழகத்திலும் புதுவையிலும் பரவலாக மழை பெய்யும். ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரி தெரிவித்தார்.
20–ந்தேதி வரை மழை நீடிக்கும். இதே போல் கேரளாவிலும் 21–ந்தேதி வரை பலத்த மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் 10 செ.மீ. மழையும், ராமேசுவரத்தில் 9 செ.மீ., பாம்பனில் 8 செ.மீ., நாகையில் 7 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
காரைக்குடி, இளையாங்குடி, திருப்பத்தூர், தொண்டியில் தலா 6 செ.மீ., காரைக்கால், பரமக்குடியில் 5 செ.மீ., கமுதி, மானாமதுரை, ராமநாதபுத்தில் தலா 4 செ.மீ. மற்றும் விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவாரூர், மதுரை, தூத்துக்குடி, திண்டுக்கல், தஞ்சை, கன்னியாகுமரி, தேனி, நெல்லை, திருச்சி மாவட்டங்களில் தலா 1 முதல் 3 செ.மீ. வரையும் மழை பெய்துள்ளது.
சென்னையில் இன்று காலை லேசாக மழை தூறியது. சில இடங்களில் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது.
Average Rating