பெங்களூரில் முன்னாள் ஏட்டு மனைவியுடன் கொலை..!!
பெங்களூரின் மையப் பகுதியான ஆர்.டி.நகர் சுல்தான் பாளையா மெயின் ரோடு மனோ ராயனபாளையா என்ற இடத்தில் வெங்கோபராவ் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார்.
வெங்கோபராவ் கர்நாடக போலீசில் ஏட்டாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். அவருக்கு வயது 80 ஆகிறது. இவரது மனைவி கலாவதி பாய். இவருக்கு வயது 70. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. தனி வீட்டில் வசித்து வந்தனர். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு வெங்கோபராவ் 20 ஆண்டுகளாக உறவினர்கள் யாருடனும் எந்த தொடர்பும் இல்லாமல் தனியாக வசித்து வந்தார். பக்கத்துவீட்டுக்காரர்களிடம் பேசுவது கிடையாது.
நேற்று இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுபற்றி கெப்பால் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பார்த்த போது வீட்டின் உள்ளே வெங்கோபராவ் ஹாலில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். மற்றொரு இடத்தில் கலாவதி பாய் கொலை செய்யப்பட்டு பிணமாக இருந்தார்.
இருவரது உடல்களும் அழுகி உருக்குலைந்து போய் இருந்தன. வெறும் எலும்புகளும் சதையும் தனித்தனியாக கிடந்தன. எனவே கொலை நடந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொலையாளிகள் யார்? கொள்ளையடிக்கும் நோக்கத்தில் கொலை செய்தார்களா? அல்லது சொத்து தகராறில் கொலை நடந்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
இருவரும் வீட்டில் சமைப்பது கிடையாது. வெளியில் ஓட்டலில் இருந்து சாப்பிடுவார்கள். மின்சார கட்டணம் செலுத்தாததால் ஒரு வருடத்துக்கு முன்பே வீட்டில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் மின்சாரம் இல்லாமல் இருட்டில் வசித்து வந்தனர்.
கலாவதிக்கு 4 சகோதரிகள் உள்ளனர். ஆனால் யாரையும் சந்திக்க வெங்கோபராவ் அனுமதிக்கவில்லை. யாருடனும் போனில் கூட பேசுவது கிடையாது. வீட்டுக்கு யாரும் வருவதும் கிடையாது. இதனால் அதில் துப்பு துலக்குவதில் போலீசிக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
Average Rating