சகோதரியை காப்பாற்ற அவரது குடிகார கணவரை கொன்ற சிறுவன்..!!
சகோதரியின் குடிகார கணவனை சிறுவனொருவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவமொன்று குஜராத் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தில் வசித்து வந்தவர் சாகர் (வயது 35). இவரது மனைவி லதா (வயது 26). இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கூலி தொழிலாளியான சாகருக்கு குடிப்பழக்கம் இருந்தது.
எனவே அவர் தினமும் குடித்துவிட்டு சென்று மனைவியை அடித்து துன்புறுத்தி வந்தார். இதனால் விரக்தி அடைந்த லதா கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவரிடம் சண்டையிட்டு பால்கர் மாவட்டம் வசாய் கிழக்கு, வாகிரிபாடாவிலுள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
இந்தநிலையில் மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து செல்ல சாகர் வசாய் சென்றுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பகல் ஒரு மணியளவில் வழக்கம் போல சாகர் மதுகுடித்து விட்டு மனைவி லதாவுடன் சண்டையிட்டுள்ளார்.
அப்போது வீட்டில் லதாவின் 10 வயது தம்பி மட்டுமே இருந்துள்ளார். சகோதரியை கண் எதிரே அவரது கணவர் அடித்து உதைப்பதை பார்த்து சிறுவன் வேதனை அடைந்தான். இந்தநிலையில் சாகர், லதாவை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதனால் லதா காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டார். தனது சகோதரியை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என நினைத்த சிறுவன் அங்கு இருந்த கத்தியை எடுத்து சாகரை சரமாரியாக குத்தியுள்ளான். இதில் சாகரின் வயிறு, மார்பு உள்ளிட்ட 15 இடங்களில் கத்திக் குத்து விழுந்துள்ளது.
இந்தநிலையில் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று இரத்த வெள்ளத்தில் கிடந்த சாகரை மீட்டு வசாய் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மாணிக்பூர் பொலிஸார் சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating