வள்ளியூர் அருகே இளம்பெண் வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை…!!
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ளது கோவைநேரி கிராமம். இந்த ஊரின் குளத்துகரை அருகே நேற்று மாலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
அப்போது அந்தப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் இளம்பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள் வள்ளியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, நாங்குநேரி ஏ.எஸ்.பி. சுகுணாசிங் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. கொலை செய்யப்பட்டு கிடந்த பெண் யார்? என்ற விபரம் தெரியவில்லை.
கொலையான பெண் பச்சை கலரில் சேலை அணிந்திருந்தார். அவரது உடல் அருகே ஒரு அரிவாள், குக்கர், ஒரு பெரிய பை கிடந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட இளம்பெண் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, அவரை மர்ம நபர்கள் கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தில் கொலை செய்யப்பட்டாரா? என பல கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கொலையாளியை பிடிக்க வள்ளியூர் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வள்ளியூர், ஏர்வாடி, நாங்குநேரி, களக்காடு பகுதிகளில் சமீபத்தில் பெண்கள் யாரேனும் மாயமாகி உள்ளார்களா? என்ற விபரத்தை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating