பத்தனம்திட்டாவில் தொழிலதிபரை சுட்டுக்கொன்று பிணத்தை எரித்த மகன் கைது…!!
கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே உள்ள செக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோய் ஜோன் (வயது 68). தொழில் அதிபரான இவர், அந்த பகுதியில் பெரிய ஜவுளிக்கடை நடத்தி வந்தார்.
இவரது மனைவி மரியம்மா. இந்த தம்பதியின் 2–வது மகன் செரின் ஜோன் (38). இவருக்கு திருமணம் ஆகாததால் பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த 26–ந்தேதி ஜவுளிக் கடைக்கு சென்ற தந்தையும், மகனும் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. 2 பேரும் மாயமாகி விட்டனர். அவர்களது கடை மட்டும் பூட்டப் பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மரியம்மா அவர்களது செல்போன்களுக்கு தொடர்பு கொண்டபோது போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து அவர், போலீசின் உதவியை நாடினார். தனது கணவர் மற்றும் மகன் திடீரென்று மாயமானது பற்றி ஆலுவா போலீசில் அவர் புகார் செய்தார்.
போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது கோட்டயம் அருகே ஒரு லாட்ஜில் செரின் ஜோன் தங்கி இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர், தனது தந்தையை சுட்டு கொன்றுவிட்டு தலைமறைவாக திரிந்த திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் பல பரப்பான தகவல்களை தெரிவித்துள்ளார்.
தொழில் அதிபர் ஜோய் ஜோன் தனது மூத்த மகனுக்கு தனது சொத்தில் அதிக பங்கு கொடுத்துள்ளார். இது இளைய மகனான செரின் ஜோனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அடிக்கடி தந்தையிடம் தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று அவர்களது ஜவுளிக்கடையில் பணி முடிந்து ஊழியர்கள் வெளியேறிய பிறகு தந்தை, மகனுக்கு இடையே சொத்து தகராறு தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜோய் ஜோன் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மகன் செரின் ஜோனை சுட முயற்சி செய்துள்ளார். உடனே தந்தையிடம் இருந்த துப்பாக்கியை பிடுங்கி அவரை செரின் ஜோன் சுட்டுக் கொன்றுள்ளார்.
அதன் பிறகு பிணத்தை கடைக்கு பின்புறம் உள்ள காலி இடத்திற்கு இழுத்து சென்று தீ வைத்து எரித்துள்ளார். ஆனால் பிணம் முழுமையாக எரியாததால் அங்கேயே பள்ளம் தோண்டி பிணத்தை புதைத்துவிட்டார்.
எல்லாம் முடிந்த பிறகுதான் அவருக்கு தான் செய்த விபரீதம் புரிந்துள்ளது. எனவே போலீசாருக்கு பயந்து கடையை பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டார். இந்த தகவல்களை அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து செரின் ஜோனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating