வாணியம்பாடி அருகே பெண் குழந்தை முட்புதரில் வீச்சு: கொடூர தாய்க்கு வலை…!!
வாணியம்பாடி ஜின்னா பாலம் அருகே பாலாறின் கிளை ஆற்றின் கரையில் உள்ள முட்புதர் அருகே ஆட்டோ டிரைவர்கள் சிலர் பயணிகளுக்காக இன்று காலையில் காத்திருந்தனர். அப்போது, முட்புதரில் பச்சிளங் குழந்தை ஒன்று வீசப்பட்டு இருந்ததை பார்த்து திடுக்கிட்டனர்.
உடனடியாக ஓடிச்சென்று குழந்தையை மீட்டனர். அப்போது பிறந்து ஓரீரு நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை என்பது தெரியவந்தது. குழந்தை ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. நேற்றிரவே முட்புதரில் குழந்தை வீசப்பட்டது போல் தெரிந்தது.
இதையடுத்து சிகிச்சைக்காக குழந்தையை வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆட்டோ டிரைவர்கள் கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு, குழந்தையின் உடல்நலம் தேறிவருகிறது.
இதுகுறித்து வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் குழந்தையை முட்புதரில் வீசிச்சென்ற கொடூர மணம் படைத்த தாயை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாணியம்பாடி அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிரசவத்திற்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. சிலமணி நேரத்தில் யாருக்கும் தெரியாமல் குழந்தையுடன் அந்த பெண் ஆஸ்பத்திரியில் இருந்து திடீரென மாயமானார். இதுகுறித்தும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
தற்போது முட்புதரில் மீட்கப்பட்ட பெண் குழந்தை, மாயமான அந்த பெண்ணுடையதாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த கோணத்திலும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
Average Rating