இஸ்ரேலுக்கு எதிராக சிரியாவும் போரில் குதிக்கிறது
இஸ்ரேலுக்கு எதிராக சிரியாவும் போரில் குதிக்கிறது. விமான தாக்குதலை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்தியதை தொடர்ந்து 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு ஓடினார்கள். இஸ்ரேல் வீரர்கள் 2 பேரை லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கடத்திச் சென்றதை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. முப்படைகளும் குண்டு வீசியதில் லெபனானின் முக்கிய நகரங்கள் சின்னாபின்னமாகி விட்டன.
இந்த தாக்குதல்களில் 800க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள். கானா நகரில் இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசியதில் 40 அப்பாவி குழந்தைகள் உள்பட 52 பொதுமக்கள் பலியானார்கள். இந்த செயலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து விமான தாக்குதல்களை 48 மணி நேரத்துக்கு இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளது.
விமான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தினாலும் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தி இருக்கிறது. இதற்கு பிரதமர் எகுத் ஆல்மர்ட் தலைமையில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. லெபனானுடன் இப்போதைக்கு போர் நிறுத்தம் இல்லை என்றும் எகுத் ஆல் மர்ட் திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.
இஸ்ரேலின் பீரங்கி படையினர் தைரே துறைமுகம் மற்றும் முக்கிய நகரங்களில் குண்டு வீசி தாக்கியபடி முன்னேறி செல்கிறது. அமைதி பேச்சு நடத்துவதற்காக லெபனான் வர இருந்த அமெரிக்க பெண் மந்திரி கண்டலிசா ரைஸ் லெபனான் பயணத்தை ரத்து செய்து விட்டார்.
இஸ்ரேல் தற்காலிகமாக விமான தாக்குதலை நிறுத்தியிருப்பதை தொடர்ந்தும், பீரங்கி படை முன்னேறி வருவதை தொடர்ந்தும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வீடுகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடங்களை தேடி ஓடி விட்டனர்.
லெபனானுக்குள் நுழைந்த இஸ்ரேல் தரைப்படையினர் பக்கத்து நாடான சிரியா மீதும் தாக்குதல் நடத்தும் சூழ்நிலை உருவாகி உள்ளது. ஹிஸ்புல்லா மறைமுகமாக ஆயுதங்கள் சப்ளை செய்து வருவதாக இஸ்ரேல் ஏற்கனவே புகார் கூறி உள்ளது.
இஸ்ரேல் தாக்கு தல் நடத்தலாம் என்பதால் சிரியாவும் லெபனான் பகுதியில் இஸ்ரேல் பீரங்கி படைகளை எதிர்க்க தயார் நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் இஸ்ரேலின் தாக்குதலை சமாளிக்க தயார் நிலையில் இருக்கும்படி தனது ராணுவத்தினருக்கு சிரியா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.