சுவீடனும் கண்காணிப்புக் குழுவில் இருந்து வெளியேறுகிறது
இலங்கையில் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், திருகோணமலை துறைமுகத்தில், கடற்படைத் தளத்தின் மீது விடுதலைப்புலிகள் ஆர்ட்டிலறி மற்றும் மோட்டார் தாக்குதல்களை நடத்தியதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது. இதில் குறைந்தது 4 கடற்படையினர் கொல்லப்பட்டதாக கூறப்படுவதுடன், மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். சுமார் 800 படையினரை ஏற்றிவந்த துருப்புக் காவிக் கப்பல் ஒன்றும் மோட்டார் தாக்குதலில் நூலிழையில் தப்பியதாகவும் இலங்கை அரசு கூறியுள்ளது.
இதேவேளை, பாதுகாப்பு அச்சங்கள் காரணமாக, இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இருந்து தமது கண்காணிப்பாளர்களை திரும்ப அழைத்துக் கொள்வதாக சுவீடன் அறிவித்துள்ளது.
கடந்த வாரம் டென்மார்க் மற்றும் பின்லாந்து ஆகியவை தமது நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்களை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து வெளியாகியுள்ள இந்த முடிவு காரணமாக, சுமார் 60 உறுப்பினர்களைக் கொண்ட கண்காணிப்புக்குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை மூன்றில் இரண்டு பங்கால் குறைந்துள்ளது.
எஞ்சியுள்ள இரு நாடுகளான ஐஸ்லாந்தும், நோர்வேயும் தம்மால் இந்த வெற்றிடத்தை தனியாக நிரப்ப முடியாது என்று கூறியுள்ளன.
விடுதலைப்புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்ததை அடுத்து, அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகளும் செப்டம்பர் முதலாம் திகதிக்கு முன்பாக கண்காணிப்புக் குழுவில் இருந்து பின்வாங்கிக் கொள்ள வேண்டும் என்று விடுதலைப்புலிகள் வலியுறுத்தியிருந்தனர்.