சுற்றுப்புற மாசினால் பக்கவாதம் அதிகரிக்கும் – ஆய்வில் தகவல்…!!
மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதால் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்று லான்ஸெட் நியூராலஜி என்ற இதழில் ஒரு ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
பக்கவாதத்தினால் உண்டாகும் வாய்குழறுதல், கண் பார்வை குறைதல், குழம்பிய நிலை போன்ற விளைவுகளுக்கு சுற்றுப்புற மாசும் ஒரு காரணம் என்று ஆய்வு ஒன்று கூறுகின்றது.
1990 -2013 ஆம் ஆண்டு வரை சுமார் 188 நாடுகளிலிருந்து பக்கவாதம் தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொள்ளும்போது இது தெரியவந்துள்ளது. இதில் வளரும் நாடுகளில் 33 சதவீதமும், வளர்ந்த நாடுகளில் 10 சதவீதமும், மாசினால் பக்கவாதம் வர வாய்ப்புகள் அதிகம் என கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் புகைபிடித்தல், மது, கடினமான வாழ்க்கைமுறை, மோசமான உணவுப் பழக்கம், போதுமான அள்வு உடலுக்கு பயிற்சி தராமல் இருப்பது ஆகியவையும் பக்கவாதத்திற்கான காரணங்கள் என்று ஆராய்ச்சியாளர் வாலரே ஃபீஜின் என்பவர் கூறுகின்றார்.
வளரும் நாடுகளில் இவை எல்லாம் கலந்த கலவையாக, மாசுபட்ட காற்று, புகைப்பிடித்தல், சத்தில்லாத உணவு ஆகியவைதான் பக்கவாதத்தை உண்டாக்குகிறது என அவர் கூறுகின்றார். சுற்றுப் புற மாசினைப் போலவே வீட்டில் உருவாகும் மாசினாலும் பக்கவாதம் உண்டாகும் என ஆய்வு தெரிவிக்கின்றது.
வீட்டில் சமையலில் உபயோகப்படுத்தப்படும் எரிபொருள்கள் மாசினை உண்டாக்குகின்றன. அவற்றிலேயே நாள் முழுவதும் இருக்க வேண்டிய சூழ் நிலையில் பக்க வாதம் வரலாம். அவர் மேலும் கூறியதாவது, ஒவ்வொரு வருடமும் சுமார் 15 மில்லியன் மக்கள் பக்கவாதத்தினால் பாதிக்கப்படுகின்றனர்.
ரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள், சோடியம் உப்பை அதிகமாய் உணவில் சேர்த்துக் கொள்பவர்கள், குறைவான சத்து கொண்ட உணவினை உண்பவர்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளாதவர்கள், வீட்டினுள் உண்டாகும் மாசு ஆகியவைகளால் பக்கவாதம் உண்டாகும் ஆபத்து உள்ளது.
மாசுபட்ட காற்று என்பது ஒரு குறிப்பிட்ட நகரை மட்டும் பாதிப்பது அல்ல, ஒட்டுமொத்த உலகத்தையும் பாதிக்கும். ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். நாளுக்கு நாள் தட்பவெப்ப நிலை அதிகரிக்கச் செய்யும்.
முக்கியமாக இந்தியா மற்றும் சீனா நாட்டில் சுற்றுபுற மாசினை கட்டுப்படுத்த வேண்டும், எரிபொருள் உபயோகப்படுத்துவதை குறைக்க வேண்டும் என்று இந்த ஆய்வு அறிவுறுத்துகின்றது
Average Rating