கல்லூரி பேராசிரியர் வேலை வாங்கி தருவதாக போலீஸ்காரர் மனைவியிடம் ரூ. 17 லட்சம் மோசடி: வாலிபர் கைது…!!
புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் நிலைய குடியிருப்பில் வசித்து வருபவர் சிவசெல்வம். வடக்கு கடற்கரை போக்குவரத்து போலீசில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி பாப்பா செல்வம். இவர் கல்லூரி பேராசிரியர் வேலையில் சேர முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில் போலீஸ்காரர் சிவசெல்வத்துக்கு திருவொற்றியூரை சேர்ந்த நாகராஜூடன் பழக்கம் ஏற்பட்டது.
அப்போது நாகராஜ் தனக்கு கல்லூரி நிர்வாகத்தினர் பலரை தெரியும். பாப்பா செல்வத்துக்கு கல்லூரி பேராசிரியர் வேலை வாங்கி கொடுக்க முடியும். இதற்கு ரூ. 17 லட்சம் தர வேண்டும் என்றார்.
இதனை நம்பிய பாப்பா செல்வம் ரூ. 17 லட்சத்தை நாகராஜிடம் கொடுத்தார். ஆனால் அவர் கூறியபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை. வாங்கிய பணத்தையும் கொடுக்க மறுத்தார்.
இதுகுறித்து பாப்பா செல்வம் பலமுறை கேட்ட போது நாகராஜ் சரியான பதிலை கூறவில்லை. இதையடுத்து நாகராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்.கே.நகரில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பாப்பா செல்வம் புகார் அளித்தார்.
இது குறித்து விசாரணை நடத்த புதுவண்ணாரப்பேட்டை போலீசுக்கு உத்தரவிடப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பாப்பா செல்வத்திடம் கல்லூரி பேராசிரியை வேலை வாங்கி தருவதாக ரூ. 17 லட்சம் வாங்கியதை நாகராஜ் ஒப்புக் கொண்டார்.
இதையடுக்கு நாகராஜை போலீசார் கைது செய்தனர். அவர் இதுபோல் வேறு யாரிடமும் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என்று விசாரணை நடந்து வருகிறது.
Average Rating