மகளை கிண்டல் செய்த கும்பலை தட்டிக்கேட்ட தந்தை அடித்துக்கொலை…!!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாவக்காடு அடுத்த பாளையூரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 52). நேற்று மாலை ரமேஷ் தனது 2-வது மகளை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு சாவக்காட்டிலுள்ள ஒரு கடைக்கு சென்றார்.
அங்கு வேலை முடிந்த பின்னர் வீடு திரும்பியபோது 7 பேர் கொண்ட கும்பல் அங்கு குடிபோதையில் இருந்தனர். மோட்டார் சைக்கிள் அருகே வந்தபோது அந்த கும்பல் வழியில் தாறுமாறாக நின்றனர்.
திடீரென ரமேசின் மகளை கேலி, கிண்டல் செய்தனர். ஆத்திரமடைந்த ரமேஷ் மகளை வீட்டில் இறக்கி விட்டு மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.
குடிபோதையில் மகளை கிண்டல் செய்த கும்பலை தட்டிக்கேட்க நடந்து வந்தார். அங்கிருந்த போதை கும்பலை ரமேஷ் தட்டிக்கேட்டார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் ரமேஷ் சாலையோரம் படுகாயங்களுடன் கிடந்தார். நீண்ட நேரத்திற்கு பின்னர் அந்த வழியே சென்ற சிலர் ரமேஷ் படுகாயங்களுடன் கிடப்பதை அறிந்து சாவக்காடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரமேசை மீட்டு சாவுக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரமேசின் உறவினர்கள் கூறுகையில் மகளை கிண்டல் செய்த போதை கும்பலை தட்டிக்கேட்டபோது அவர்கள் ரமேசை அடித்துக்கொன்று விட்டனர் என்றனர்.
அந்த கும்பல் குறித்து போலீசார் விசாரித்தபோது அவர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல என்பதும். அவர்களை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் கூறினர்.
பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் 7 பேர் கும்பலை சாவக்காடு போலீசார் தேடி வருகிறார்கள்.
Average Rating