இந்தியக் கூந்தலுக்கு லண்டனில் செம மவுசு!
உலகிலேயே இந்தியப் பெண்களின் கூந்தல் தான் ரொம்ப அழகு என்று லண்டனைச் சேர்ந்த சிகை அலங்கார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா என்று புராணங்களில விவாதம் நடந்ததைக் கேள்விப்பட்டிருக்கிறோம். உண்டு, அதுவும் இந்தியப் பெண்களின் கூந்தலைப் போல சிறப்பான முடியை எங்குமே கண்டதில்லை என்று லண்டனைச் சேர்ந்த சிகை அலங்கார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
லண்டனில் உள்ள பெரும்பாலான சிகை அலங்கார நிபுணர்கள், விக் தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் இந்தியாவிலிருந்துதான் முடியை இறக்குமதி செய்கிறார்களாம். திருப்பதியிலிருந்துதான் அதிகபட்சமான முடி லண்டனுக்குள் இறக்குமதியாகிறது.
திருப்பதி கோவிலில் தினமும் 4,000க்கும் மேற்பட்ட பெண்கள் மொட்டை போட்டுக் கொள்கிறார்கள். இந்த முடி இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அனுப்பபப்டுகிறது.
லண்டனில் மட்டும் 40க்கும் மேற்பட்ட சிகை அலங்கார நிலையங்கள், விக் தயாரிப்பாளர்கள் திருப்பதி முடியை வாங்குகின்றனர். பெண் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற விக் தயாரிக்கவும், ‘சவுரி’ தயாரிக்கவும் லண்டன் பெண்களுக்கு ‘திருப்பதி’தான் கை கொடுக்கிறதாம்.
இந்திய முடி தான் நல்ல தரமாகவும், திடமாகவும் இருப்பதாக லண்டன் சிகை அலங்கார நிலையங்கள் சான்றிதழ் கொடுக்கின்றன. லண்டன் பெண்களும் இந்திய முடியையே விரும்பி கேட்டு விக் தயாரித்துக் கொள்கிறார்களாம்.
இந்திய முடியை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும், எந்த நிறத்தையும் அதில் பூசிக் கொள்ளலாம், ரொம்ப நாளைக்கு பிய்ந்து போகாமல் உழைக்கும், சவுரி தயாரிக்க ரொம்ப சௌகரியமானது என்பது லண்டன் நிபுணர்களின் கருத்து.
பிரபல நடிகையும், பாடகியுமான ஜெனீபர் லோபஸ், கால்பந்து நட்சத்திரம் டேவிட் பெக்காமின் மனைவியும், பாடகியுமான விக்டோரியா பெக்காம், நடிகை பாரீஸ் ஹில்டன் ஆகியோர் இந்திய சவுரியையே அதிகம் பயன்படுத்துகிறார்களாம்.
விக்டோரியா பெக்காம் தனது சிகை அழகைப் பேணிப்பாதுகாக்கவே மாதத்திற்கு கிட்டததட்ட ஒன்னே முக்கால் லட்சம் செலவிடுகிறாராம்.
(**வெறும் தேங்காய் எண்ணையை மட்டுமே போட்டு நம்ம ஊர்ப் பெண்கள் முடியை ஸ்டெடியாக வைத்துக் கொள்கிறார்கள் என்ற ரகசியம் விக்டோரியாவுக்குத் தெரியாது போலும்.. -ஏதோ நம்மால் ‘முடி’ந்தது!)