நண்பர்களுடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி என்ஜினீயர் பலி..!!
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது 23), என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் புதுவையில் தங்கி கோர்க்காடு பகுதியில் உள்ள இருசக்கர வாகன தயாரிப்பு தொழிற்சாலையில் அப்ரண்டிசாக பயிற்சி பெற்று வந்தார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் தன்னுடன் பயிற்சி பெற்று வந்த நண்பர்களான தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சாய்சசிதர் (23), கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த ஆனந்த் (21), திருநெல்வேலி பெருமாள்புரம் அருகே என்ஜி.ஓ. காலனியை சேர்ந்த நவீன் (23) மற்றும் புதுவை பாக்கமுடையான்பட்டை சேர்ந்த சத்தியமூர்த்தி ஆகியோருடன் சின்னவீராம்பட்டினம் கடலில் குளிக்க சென்றனர்.
5 பேரும் உற்சாகமாக குளித்து கொண்டிருந்தபோது திடீரென எழும்பிய ராட்சத அலையில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை கடல் அலைகள் இழுத்து சென்றது. இதில் நவீன் மற்றும் சாய்சசிதர் ஆகியோர் போராடி நீந்தியபடி கரை சேர்ந்தனர்.
ஆனால் ஆனந்த், ஸ்ரீகாந்த், சத்தியமூர்த்தி ஆகியோர் எவ்வளவோ போராடியும் கரை திரும்ப முடியவில்லை. இதனால் நவீனும், சாய்சசிதரும் கூச்சலிட்டனர். உடனே அங்கிருந்த மீனவர்கள் மற்றும் அருகில் கடலில் குளித்து கொண்டிருந்தவர்கள் விரைந்து வந்து அலையில் தத்தளித்த ஸ்ரீகாந்த், ஆனந்த், சத்தியமூர்த்தி ஆகிய 3 பேரையும் மீட்டனர்.
மூச்சு திணறி மயங்கிய நிலையில் இருந்த அவர்கள் உடனடியாக புதுவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஸ்ரீகாந்த் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating