ரியோ ஒலிம்பிக்: இந்திய பெண்கள் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி..!!
ரியோ டி ஜெனீரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 100க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் இந்திய பெண்கள் ஹாக்கி இடம்பெற்றுள்ளது. இதுவரை ஒரு பதக்கத்தைக்கூட இந்தியா கைப்பற்றவில்லை. முன்னணி வீரர்கள் பதக்கத்தின் விளிம்பு வரை சென்று தோல்வியை சந்தித்தனர்.
இந்நிலையில், பெண்களுக்காக ஹாக்கி குரூப் பி லீக் போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. துவக்கம் முதலே இந்திய அணிக்கு கடும் சவாலாக விளங்கிய ஆஸ்திரேலிய வீராங்கனைகள் அடுத்தடுத்து கோல்கள் அடித்து அதிர்ச்சி அளித்தனர். இந்தியாவின் கோல் முயற்சியையும் அபாரமாக தடுத்தனர்.
ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் கேத்ரின் கோல் அடித்து ஆஸ்திரேலியாவின் கணக்கைத் தொடங்கினார். அதன்பின்னர் ஜார்ஜினா, ஜூடி ஆகியோர் தலா இரண்டு கோல்களும், ஜேன் ஒரு கோலும் அடிக்க ஆஸ்திரேலியா 6-0 என வலுவான முன்னிலை பெற்றது. கடைசி நிமிடத்தில் இந்திய வீராங்கனை அனுராதா ஆறுதல் கோல் அடித்தார். இறுதியில் 6-1 என ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இந்திய அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்துள்ளது. ஒரு போட்டியை டிரா செய்துள்ளது. இதனால் குரூப் பிரிவில் இந்தியா கடைசி இடத்தில் உள்ளது.
Average Rating