புரோட்லேண்ட் நீர்மின் நிலையத் திட்டத்தின் அகழ்வுப் பணிகள் காரணமாக நிலம் தாழிறங்கும் அபாயம்..!!
புரோட்லேண்ட் நீர்மின் நிலைய திட்டத்தின் அகழ்வுப் பணிகள் காரணமாக நிலம் தாழிறங்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகக் கூறப்படும் கிதுல்கல பொல்பிடிய பகுதிக்கு மின்சக்தி மற்றும் மீள்புதுப்பித்தல் சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய நேற்று கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டிருந்தார்.
இலங்கை மின்சார சபையினால் கினிகத்தேன – பொல்பிடிய பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புரோட்லேண்ட் நீர்மின் நிலைய திட்ட அகழ்வுகள நடைபெறும் சுரங்கப்பாதைக்கு மேலாக அமைந்துள்ள வீடொன்று அண்மையில் தாழிறங்கியது.
அதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து நேரில் கண்டறியும் நோக்குடன் மின்சக்தி மற்றும் மீள்புதுப்பித்தல் சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய அந்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
நான்கு தசாப்தங்களுக்கு முன்னரே இந்த திட்டம் வகுக்கப்பட்டிருந்ததாக இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பிரதேச மக்கள் எதிர்நோக்கியுள்ள அபாய நிலை குறித்து தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் தகவல் திரட்டி வருவதாகவும், அகற்றப்பட வேண்டிய வீடுகள் மற்றும் இழப்பீடுகள் தொடர்பில் அறிக்கைகள் கிடைக்கவுள்தாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அந்த பகுதியிலுள்ள மக்கள் விரும்பினால் நியாயமான இழப்பீடுகளை வழங்கி அவர்களை அங்கிருந்து வெளியேற்றவும், திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மேலும் சுட்டிக்காட்டினார்.
Average Rating