ராம்குமார் உடல் பிரேத பரிசோதனை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!
ராம்குமார் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. இம்மனுவினை விசாரணைக்கு ஏற்க தலைமை நீதிபதி அமர்வு மறுத்ததோடு, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தியது.
இதையடுத்து ராம் குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்வது தொடர்பாக அவரது வழக்கறிஞர் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், ராம் குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், பிரேத பரிசோதனையை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கையை முன்வைத்திருந்தனர். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிப்பதாக கூறிய தலைமை நீதிபதி சிவஞானம், இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
அப்போது, ராம்குமாரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்றும், கூடுதலாக நான்கு மருத்துவர்கள் கொண்ட குழு முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய அனுமதி அளிப்பதாகவும் நீதிபதி சிவஞானம் உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து ராம் குமாரின் உடல் நாளை பிரேத பரிசோதனை செய்யப்படும் என ராயப்பேட்டை மருத்துவமனை டீன் தெரிவித்தார்.
Average Rating