வவூனியா கண்ணிவெடித்தாக்குதலில் மருத்துவர் உள்ளிட்ட 5 பேர் பலி
இலங்கையின் வடக்கே வவுனியாவில் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் உள்ள நெடுங்கேணி பகுதியில், அம்புலன்ஸ் வண்டியொன்றின் மீது நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் சம்பவத்தில் வைத்தியர் ஒருவர் அவரது மனைவி மற்றும் இரண்டு தாதியர், வாகன சாரதி என ஐந்துபேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெடுங்கேணி வைத்தியசாலையில் இருந்து புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு நோயாளி ஒருவரைக் கொண்டு சென்று சேர்த்துவிட்டு திரும்பி வந்தபோதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா மாவட்ட போர்நிறுத்த கண்காணிப்பு குழு, சர்வதேச செஞ்சிலுவைக்குழு, இலங்கை செஞ்சிலுவைக்குழு ஆகியவற்றின் பிரதிநிதிகளும், வவுனியா மாவட்ட பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரும், புலிகளின் வவுனியா மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளரும் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இதேவேளை, புளியங்குளம் நெடுங்கேணி வீதியில் 09.08.06பகல் 12.30 மணியளவில் இடம்பெற்ற இன்னுமொரு கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் விடுதலைப் புலிகளின் நடமாடும் வைத்திய சேவையைச் சேர்ந்த வாகனம் ஒன்று சிக்கி சேதமடைந்ததாக புலிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்தச் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கிளேமோர் தாக்குதல்களை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரே நடத்தியிருப்பதாக புலிகளின் வவுனியா மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எஸ்.ஞானம் தெரிவித்தார்.
இராணுவம் மறுப்பு
எனினும் இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கும் இராணுவத்தினருக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என இராணுவத்தினர் மறுத்துள்ளனர்.
இதனிடையில் நெடுங்கேணி வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டிமீது நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதல் சம்பவத்தையடுத்து, கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பணியாற்றும் அம்புலன்ஸ் வண்டிச் சாரதிகள் சுய பாதுகாப்பு காரணங்களுக்காக மாலை 5 மணிக்குப் பின்னர் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கோ அல்லது வவுனியாவுக்கோ நோயாளிகளை ஏற்றிச் செல்ல முடியாது என வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கு அறிவித்துள்ளனர்.