பிரதமர் கொய்சுமி போர்க்கோவிலுக்கு செல்லக்கூடாது: ஜப்பானுக்கு சீனா எச்சரிக்கை
ஜப்பான் நாடு இன்று அமைதியை அதிகம் நேசித்தாலும் கடந்த காலத்தில் 2-வது உலகப்போர்நடந்தபோது,அது சீனா,கொரியா ஆகியநாடுகளை ஆக்கிரமித்துக் கொண்டது. அங்கு ஜப்பான் ராணுவம் அட்டூழியங்களில் ஈடுபட்டது. இதனால் சீனா, கொரியா நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஜப்பானின் கடந்த காலச்செயல்பாடுகள் கசப்பானது.
போர்க்களங்களில் வீரமரணம் அடைந்த ஜப்பானியர்கள் நினைவைப்போற்றும் வகையில் டோக்கியோவில் யசுகுனி என்ற கோவில் உள்ளது.ஜப்பானின் போர்க்கால அட்டுழியங்களின் அடையாளமாக இந்தக்கோவில் இருக்கிறது.
யசுகுனிகோவிலுக்கு ஜப்பான் பிரதமர் கொய்சுமி அடிக்கடி சென்று வணங்குவது வழக்கம். இப்படி அவர் அங்கு செல்வது சீனா மற்றும் கொரியா நாடுகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு சீனாவில் எதிர்ப்பு போராட்டங்கள் நடந்தன. கொய்சுமி யசுகுனி கோவிலுக்கு செல்வது இருநாடுகள் இடையேயான உறவில் ஒரு முள்ளாக இருந்து உறுத்திக் கொண்டு இருக்கிறது. உறவு மேம்படுவதற்கு இது தடையாக இருக்கிறது.
இந்த நிலையில் கொய்சுமி மீண்டும் அந்தக்கோவிலுக்கு செல்வார் என்று வதந்திகள் வலம் வருகின்றன.இதனால் கோபம் கொண்ட சீனா, யசுகுனி கோவிலுக்கு ஜப்பானியத் தலைவர்கள் செல்லக்கூடாது என்று அது எச்சரித்து உள்ளது.இது தொடர்பாக சீனாவின் வெளிநாட்டு அமைச்சரகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஜப்பான் தலைவர்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். தவறான பாதையில் செல்லும் அவர்கள் தங்களை மாற்றிக்கொள்வார்கள்என்று கூறப்பட்டு உள்ளது.
வருகிற 15-ந்தேதி 2-வது உலகப்போரின்போது ஜப்பான் சரண் அடைந்த தினம். அன்றையதினம் அவர் போர்க்கோவிலுக்கு செல்வார் என்று நம்பப்படுகிறது.