புதுக்கோட்டை அருகே கடலில் மூழ்கிய 2 மீனவர்களின் உடல்கள் மீட்பு..!!
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் அருகே உள்ள ஏம்பவயல் பகுதியில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளில் சுமார் 400 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் 14 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்த போது ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையை சேர்ந்த குப்பைபிச்சை என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகின் அடிப்பகுதியில் கடல் நீர் புகுந்தது.
படகு மூழ்கவே, அதில் இருந்த குப்பைபிச்சை மகன் ஆறுமுகம் (32), தூ.வில்லாயுதம்(55), சக்காத்து (44), பாலு (55) ஆகியோர் கடலில் குதித்து நீந்தினர். அப்போது ஆறுமுகம் ,வில்லாயுதம் தனியாகவும், சக்காத்து, பாலு தனியாகவும் பிரிந்தனர்.
கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பாததால் அவர்களது குடும்பத்தினர் மற்றும் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனிடையே நேற்றிரவு ஆறுமுகம், வில்லாயுதம் கரை திரும்பினர். அவர்கள் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் கூறும் போது, நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது எங்களது படகில் தண்ணீர் புகுந்தது. இதனால் கடலில் குதித்து நீந்தி கொண்டிருந்தோம். மேலும் தங்களை காப்பாற்றும்படி கூக்குரலிட்டோம்.
அப்போது அந்த வழியாக மீன்பிடித்து வந்து கொண்டிருந்த தனிக்கோடி என்பவரின் படகில் ஏறி தப்பினோம். சக்காத்து, பாலு ஆகியோர் கடலில் நீந்தும் போது வலையில் சிக்கிக்கொண்டனர் என்றனர்.
இதையடுத்து ஜெகதாப்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் அப்பகுதியை சேர்ந்த நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று காலை 2 பேரையும் தேடி கடலுக்கு சென்றனர். அப்போது 2 மீனவர்களும் கடலில் மூழ்கி இறந்து கிடந்தனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
2 மீனவர்கள் பலியான சம்பவம் ஜெகதாப்பட்டினம் பகுதி மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating