பொலிஸாரின் அடாவடித்தனங்கள் அன்று மாதிரி இன்றும் தொடர்கின்றன…!!
பொலிஸார் வழமையான பிழைகளையே தொடர்ந்தும் செய்து வருவதாக முன்னிலை சோசலிச கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜகொட குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் கருந்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
சில ஆண்டுகளுக்கு முன்னதாக பசியாலை பிரதேசத்தில் இவ்வாறான ஓர் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இளைஞர் ஒருவரை பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்திருந்தனர்.
உத்தரவினை மீறி வண்டியை நிறுத்தாது சென்ற காரணத்தினால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அப்போது பொலிஸார் கூறியிருந்தனர். எனினும் பிரேதப் பரிசோதனையின் போது இளைஞரின் முன் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
அண்மையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார் “கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்திலேயே அவ்வாறான பொலிஸ் சேவை காணப்பட்டது. தற்போது தொழில்சார் பொலிஸ் திணைக்களமொன்று சிறந்த சேவையை வழங்கி வருகின்றது”
தொழில்சார் பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவத்தின் மூலம் தெரிகின்றது.
ஜனாதிபதியும், பிரதமரும், ஊடக அமைச்சரும் போட்டிக்கு ஊடக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.
கலாசாரத்தை மாற்றியமைப்பதாகவே அவர்கள் அறிக்கை வெளியிடுகின்றனர். எனினும் இந்தக் கலாச்சாரத்தை அவர்கள் மாற்றியமைக்கப் போவதில்லை.
பொலிஸ் ஆணைக்குழு உருவாக்கியதன் பின்னர் சிறந்த பொலிஸ் சேவை உருவாகும் என்றார்கள். எனினும் நாம் பார்த்தோம் அல்லவா பொலிஸாரின் நடவடிக்கைகளை என புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
Average Rating