இராக் தொடர் குண்டுவெடிப்பில் 57 பேர் சாவு
இராக்கில் தலைநகர் பாக்தாத்துக்கு தென்கிழக்கே ஜபரானியா என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 57 பேர் உயிரிழந்தனர். 150 பேர் காயமடைந்தனர். ஜபரானியாவில் ஷியா, ஸன்னி பிரிவு முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கலந்து வசித்து வரும் பகுதியாகும். இங்குள்ள மக்கள் நெருக்கம் நிறைந்த மார்க்கெட் பகுதியில் தீவிரவாதிகள் ராக்கெட் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 4 மாடி கட்டடம் தகர்ந்தது. இதில் சிலர் உயிரிழந்தனர்.
இதையடுத்த 5 நிமிடங்களில் கார் குண்டு வெடித்ததில் 10-த்துக்கும் மேலானவர்கள் உயிரிழந்தனர். தவிர ஏராளமான பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் நடந்த இடத்தின் அருகிலேயே அடுத்த அரைமணி நேரத்தில் மற்றொரு குண்டுவெடித்தது. தீவிரவாதிகளின் தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவர் மோட்டார் சைக்கிள் வந்து கூட்டத்தினர் மத்தியில் குண்டுவெடிக்கச் செய்தார். மற்றொரு குண்டுவெடிப்பில் 2 கட்டடங்களும், ஒரு வீடும் சேதமடைந்தன. போலீஸ் வாகனத்தை குறிவைத்து நடந்த மற்றொரு தாக்குதலில் 3 பேர் காயமடைந்தனர்.
கடந்த ஜூலை 1-ம் தேதி டிரக்கில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் 66 பேர் பலியானார்கள். இதையடுத்து நடந்துள்ள மிகப் பெரிய தாக்குதலாகும் இது.