படுகொலை விசாரணை அறிக்கை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்கப்படும்…!!
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொக்குவிலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அறிக்கை ஒரு வாரத்தில், சமர்ப்பிக்கப்படும் என்று, ஆணைக்குழுவின் செயலர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக இரண்டு பேர் கொண்ட விசாரணைக் குழுவொன்றை தேசிய பொலிஸ் ஆணைக்குழு நியமித்துள்ளது.
பொதுமக்கள் முறைப்பாட்டுப் பிரிவின் மேலதிக பணிப்பாளர் ஆனந்த விஜேசூரியவை உள்ளடக்கிய இந்த விசாரணைக் குழு நேற்று யாழ்ப்பாணம் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
நிறுத்துமாறு இடும் உத்தரவை மீறிச் செல்லும் வாகனங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்படவில்லை.
குற்றமிழைத்தவர் என்பதை உறுதி செய்யாத வரையில், எந்த விடயம் தொடர்பாகவும் நிராயுதபாணியான எவரையும் சுடுவதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் இல்லை.
தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவர் தப்பிச் செல்ல முயன்றால் மாத்திரமே துப்பாக்கிச் சூடு நடத்த முடியும்.
யாழ். மாணவர்களின் மரணம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் தேசிய பொலிஸ் ஆணைக் குழுவின் அறிக்கை ஒரு வாரகாலத்தில் கையளிக்கப்படும்.
பொலிஸார் குற்றமிழைத்தது கண்டறியப்பட்டிருந்தால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.
Average Rating