ஆழ்வார்திருநகரி அருகே மூதாட்டி அடித்துக்கொலை…!!
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள மலவராயநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ். விவசாயி. இவரது மனைவி பச்சமாலை (வயது68). தங்கராஜூக்கும் அதே பகுதியை சேர்ந்த அவரது தம்பி செல்வராஜூக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. அவ்வப்போது இரு குடும்பத்தினருக்கும் இது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் வந்த செல்வராஜின் மகன் முருகன் (30) தனது பெரியம்மா பச்சமாலையிடம் சென்று நிலபிரச்சினை குறித்து பேசினார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஒருவருக்கொருவர் தாக்கினர்.
இதில் பச்சமாலை முருகனை கடித்தார். உடனே ஆத்திரம் அடைந்த முருகன் பச்சமாலையை கீழே தள்ளி சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த பச்சமாலையை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் பச்சமாலை கடித்ததில் காயமடைந்த முருகன் ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பச்சமாலை இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறில் பெண் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating