நோபல் விருதை ஏற்றுக் கொண்டார் பாப் டைலான்: சுவிடன் அகடாமி அறிவிப்பு…!!
ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், உலக அமைதி, பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் பாப் டைலானுக்கு (75) அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு இரண்டு வாரங்களுக்கு முன்பு ஸ்டாக்ஹோமில் வெளியிடப்பட்டது. பாடகர், பாடலாசிரியர், ஓவியர், கவிஞர், நடிகர் என பல்வேறு துறைகளில் சிறந்தவர் பாப் டைலான்.
அதே போல், நாட்டுப்புற பாடல் தொடங்கி ராக் பாடல்கள் வரை பல வகை இசையிலும் முத்திரை பதித்திருக்கிறார். இவரது பாடல்கள் உலக அளவில் புகழ் பெற்றவை. நோபல் பரிசளிப்பு விழா, வரும் டிசம்பர் 10ம் தேதி ஸ்டாக்ஹோம் நகரில் நடக்கிறது.
இதனிடையே நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நாள் முதல் டைலானிடம் இருந்து எந்தவொரு தகவலும் வெளியாகாமல் இருந்தது. தொடர்ச்சியாக நோபல் பரிசு நிர்வாக கமிட்டியால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறப்பட்டது. இதனால் நோபல் பரிசை அவர் ஏற்றுக் கொண்டாரா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இந்நிலையில், இறுதியாக பாடகர் பாப் டைலான் நோபல் விருதினை ஏற்றுக் கொண்டுள்ளதாக சுவிடன் அகடாமி அறிவித்துள்ளது.
இது குறித்து அகடாமியின் நிரந்தர செயலாளர் சரா டேனியஸிடம் டைலான் கூறுகையில், ‘நோபல் பரிசு அறிவிப்பு என்னை பேச முடியாமல் செய்து விட்டது’ என்றார்.
இருப்பினும் ஸ்டாக்ஹோம் வருகை புரிந்து விருதினை அவர் பெற்றுக் கொள்வாரா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அகடாமி தெரிவித்துள்ளது.
Average Rating