கடையம் அருகே நெஞ்சை உருக்கும் காட்சி: இறந்த மான் குட்டியைத் தேடி அலையும் தாய்..!!
கடையம் அருகே மாதாபுரம் ஜெபமலை பகுதியில் மிளா, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் நீர் தேடியும், இரை தேடியும் சாலையைக் கடந்து தோட்டங்களுக்குள் செல்வது வாடிக்கையாகியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மான்கள் கூட்டமாக வந்தபோது வாகனம் மோதியதில் பிறந்து சில மாதங்களேயான மான் குட்டி இறந்தது. மற்ற மான்கள் முள்புதருக்குள் ஓடிவிட்டன. வனத்துறையினர் மான் குட்டியை மீட்டு பரிசோதனைக்குப் பின் புதைத்தனர்.
ஆனால் இறந்த குட்டியின் தாய் மான் முள்புதருக்குள் இருந்த படியே நேற்று முதல் குட்டி அடிபட்டு இறந்த இடத்தையே வெறித்துப் பார்த்தபடி உள்ளது. அருகிலுள்ள தோட்டத்தின் வேலிக் கம்பியின் உள்பக்கமாக நின்று கொண்டு சாலையையே பார்த்தபடி உள்ளதை அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் நின்று பார்த்துச் செல்கின்றனர். அந்த தாய் மான் 2 நாட்களாக உணவருந்தாமல் அதே இடத்தில் நிற்பதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். கூட்டம் சேர்ந்தவுடன் முள்புதருக்குள் ஓடி ஒளிந்து கொள்வதும் கூட்டம் குறைந்தவுடன் சாலையோரத்தில் வந்து பார்ப்பதுமாக இருப்பது காண்பவர் மனதை உருக்குவதாக உள்ளது.
வனப்பகுதியில் வறட்சியால் நீர் மற்றும் உணவு இல்லாததால் கிராமப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுவதும் தொடர்கதையாகி உள்ளது. இதனால் சாலையைக் கடக்கும் போது வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் வாகனங்களில் செல்பவர்களும் கீழே விழுந்து அடிபடும் நிலையும் ஏற்படுகிறது. எனவே கடையம் தென்காசி சாலையில் ஜெபமலை அருகிலும், நடு மாதாபுரம் பேருந்து நிறுத்தம் அருகிலும் வனத்துறை சார்பில் அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Average Rating