வியாசர்பாடியில் ரவுடி கொலை: 6 பேர் போலீசில் சரண்…!!
வியாசர்பாடி பி.வி. காலனி முதல் தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 26). ரவுடி.
நேற்று முன்தினம் வியாசர்பாடி ரெயில் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் செம்பியம் போலீஸ் நிலையத்தில் கொலையில் தொடர்புடைய பி.வி. காலனியை சேர்ந்த தொப்பை கணேசன், அறிவழகன், சந்தோஷ், செங்குன்றத்தை சேர்ந்த சாலமன், விஜய், குதிரை சுரேஷ் ஆகிய 6 பேர் சரணடைந்தனர்.
அவர்களிடம் இன்ஸ்பெக்டர் உக்கிரபாண்டியன் விசாரணை நடத்தினார். அப்போது தொப்பை கணேசன் பரபரப்பு வாக்கு மூலம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கடந்த ஆண்டு பழனியின் உறவினரான தி.மு.க. வட்ட செயலாளர் இடிமுரசு இளங்கோவை நாங்கள் தீர்த்து கட்டினோம். இதனால் பழனி மற்றும் அவரது ஆதரவாளர்கள் எங்களை தீர்த்து கட்ட நோட்டமிட்டனர். எனவே நாங்கள் அவரை முந்தி பழி தீர்க்க வேண்டும் என முடிவு செய்தோம்.
இதற்கிடையே கடந்த 2014-ம் ஆண்டு செங்குன்றத்தை சேர்ந்த ரவுடி சரவணனை, பழனி தரப்பினர் கொலை செய்து இருந்தனர். எனவே சரவணனின் ஆதரவாளர் களான சாலமன், விஜய், குதிரை சுரேஷ் ஆகியோரும் பழனியை தீர்த்து கட்ட சமயம் பார்த்து இருந்தனர்.
இதனை அறிந்த நாங்கள் சாலமன் தரப்பினரிடம் பேசி பழனியை தீர்த்து கட்ட திட்டம் தீட்டினோம். நேற்று முன்தினம் பழனி மோட்டார் சைக்கிளில் வெளியே செல்வதை அறிந்து பின் தொடர்ந்து சென்று வெட்டிக் கொன்றோம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? கொலைக்கு வேறு ஏதேனும் முன் விரோதம் இருக்கிறதா? என்பது குறித்து சரணடைந்த 6 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating