மத்திய கிழக்கு போரில் ஹெஸ்பொல்லவிற்குதான் வெற்றி-சிரிய, இரானிய அதிபர்கள்
மத்தியகிழக்கு மோதல்கள் இஸ்ரேலுக்கு எதிரான ஹெஸ்பொல்லாவின் வெற்றி என்று வர்ணித்துள்ள சிரியா மற்றும் இரான் ஆகிய நாடுகளின் தலைவர்கள், அந்த பிராந்தியத்தின் எதிர்காலத்தில் இது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளனர். புதிய மத்திய கிழக்கு உதித்துள்ளதாக கூறும் சிரியாவின் அதிபர் பஷர் அல் ஆசாத் அவர்கள், அந்தப் பிராந்தியத்துக்கான அமெரிக்க பார்வை ஒரு மாயை என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
இஸ்ரேலுக்கு தொடர்ந்து பயந்துகொண்டிருக்க வேண்டியதில்லை என்ற அரபு உலகின் பலரது நம்பிக்கையை, ஆசாத் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளதாக ஒரு பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
புதிய மத்திய கிழக்கு உதயமாவதைப் பற்றி பிரிட்டனும், அமெரிக்காவும் பேசிக்கொண்டிருந்தனவே ஒழிய,அங்குள்ள மக்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் குறித்து அவை அக்கறை கொண்டிருக்கவில்லை என்று இரானின் அதிபர் அஹமதி நெஜாத் தெரிவித்துள்ளார்.
லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கான அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகியவற்றின் பிரதிபலிப்பானது, ஐக்கிய நாடுகள் மன்றின் பாதுகாப்புச் சபையின் மதிப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.