வானில் இருந்து விழுந்த மர்ம பொருள் எது?: ஆய்வு செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் வருகை…!!
கரூர் மாவட்டம் சிவகிரி அருகே உள்ளது கொளந்தபாளையம் கிராமம். நேற்று இங்கு வானில் இருந்து பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் ஒன்று விழுந்தது. பயங்கர சத்தத்தை கேட்டதும் ஆங்காங்கே டீக்கடை மற்றும் கடைகள் முன்பு நின்று கொண்டு இருந்த ஊர் பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
அப்போது வானத்தில் இருந்து ஏதோ மர்ம பொருள் பூமியை நோக்கி வேகமாக வந்து கொண்டு இருந்தது. அது பார்ப்பதற்கு வட்ட வடிவத்தில் இரும்பு பொருள் போல் தெரிந்தது.
வானில் இருந்து வேகமாக வந்த அந்த பொருள் கொளந்தபாளையம் கிராமத்தில் குழந்தைவேல் என்பவரது வீட்டு வாசலின் முன்பு உள்ள ஒரு வேப்பமரத்தின் மீது மோதியது. பின்னர் கிளைகளை உடைத்தபடி கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் பம்பரம் போன்று சிறிது நேரம் வேகமாக சுழன்றபடி நின்றது.
அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியுடன் அந்த மர்ம பொருளின் அருகில் சென்று பார்த்தனர். அந்த பொருள் சுமார் 10 கிலோ எடையில் வட்ட வடிவிலான இரும்பு போன்ற தோற்றம் உடைய பொருளாக இருந்தது.
இந்த தகவல் காட்டுத் தீ போல அந்தப்பகுதி முழுவதும் பரவியது. இதனால் சிவகிரி, கொளந்த பாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமானோர் அதிசயத்துடன் மர்ம பொருளை பார்த்துச்சென்றனர்.
மேலும் இது பற்றிய தகவல் அறிந்ததும் தென்னிலை நில வருவாய் அலுவலர் ரமேஷ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் துரைசாமி, முனியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். வானில் இருந்து விழுந்த மர்ம பொருள் அங்குள்ள ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
அந்த பொருள் பறக்கும் தட்டாக இருக்குமா? அல்லது ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் உடைந்த பாகமா? என்று தெரியவில்லை. இது குறித்து அதிகாரிகள் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வானத்தில் இருந்து விழுந்த மர்ம பொருள் குறித்து ஆய்வு செய்வதற்காக கரூர் வருகின்றனர்.
அவர்கள் வந்து ஆய்வு செய்த பின்னர் தான் மர்ம பொருள் குறித்த விவரம் தெரியவரும். இருப்பினும் இந்த மர்ம பொருளால் கரூர் மாவட்டம் முழுவதும் பரப ரப்பு நிலவி வருகிறது.
Average Rating